3894. | 'தீ எழுந்தது, விசும்புற; நெடுந் திசை எலாம் போய் எழுந்தது, முழக்கு; உடன் எழுந்தது, புகை; தோய நன் புணரியும், தொடர் தடங் கிரிகளும், சாய் அழிந்தன; - அடித்தலம் எடுத்திடுதலால். |
அடித்தலம் எடுத்திடுதலால் - (அவர்கள்) கால்களைத் தூக்கி வைத்ததால்;தீ விசும்புற எழுந்தது - நெருப்பு வானத்தை அடையுமாறு மேலெழுந்தது; முழக்கு - (அவர்கள் செய்த) ஆரவாரம்; நெடுந்திசை எலாம் போய் - நீண்ட திசைகளெங்கும் சென்று; எழுந்தது - ஒலித்தது; புகை - (அந்நெருப்பின்) புகையும்; உடன் எழுந்தது - கூடவே பரவிற்று; தோய நல் புணரியும் - நீரினை உடைய நல்ல கடலும்; தொடர் தடங்கிரிகளும்- பெரிய மலைத் தொடர்களும்; சாய் அழிந்தன - அழகு கெட்டன. தீ - அடிகள் படுவதால் ஏற்படும் உராய்வில் நிலத்தினின்று எழுந்தது. கடலும் மலையும் தன் நிலை கெட்டன என்பதால் போரின் கடுமை புலனாகும். தோயம் - நீர். 'எழுந்தது' என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்ததால் இப்பாடல் சொற்பொருள்பின் வருநிலையணிஅமைந்தது. 9 |