இராமனிடம், சுக்கிரீவன் சில செய்திகளைத் தெரிவித்தல்

கலிவிருத்தம்

3901.ஆயிடை, அரிக்குலம் அசனி அஞ்சிட
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல், ஓங்கிய
தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய்,
'நாயக! உணர்த்துவது உண்டு நான்' எனா.

     ஆயிடை- அப்பொழுது; அரிக்குலம் - குரங்குக் கூட்டம்; அசனி
அஞ்சிட -
இடியும் அச்சம் அடையுமாறு; வாய் திறந்து ஆர்த்தது -
வாய்விட்டு ஆரவாரித்தது; வள்ளல் - இராமன்; ஓங்கிய தூய நல்
சோலையில் -
உயர்ந்த தூய்மையான அழகிய சோலையில்; இருந்த
சூழல்வாய் -
வந்து தங்கியிருந்த சமயத்தில்; நாயக - (சுக்கிரீவன் இராமனை
நோக்கித்) 'தலைவனே!' நான் உணர்த்துவது - நான் சொல்லவேண்டுவது;
உண்டு எனா -
(ஒன்று) உளது என்று -

     'எனா' என்னும் வினையெச்சம் இப்படலத்தின் நான்காம் பாடலில் வரும்.
'காட்டினன்' என்னும் வினைமுற்றைக் கொண்டு முடியும்.

    மராமரங்களைத் துளைத்தும், துந்துபியை உந்தியும் தம் வலிமையைக்
காட்டிச்சுக்கிரீவனுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்தமையால் மகிழ்ச்சி
மிகுதியால்அரிக்குலம் வாய்திறந்து ஆர்த்தது.                        1