இராமன் சிறிது தெளிந்து, பேசுதல் 3919. | எரி கதிர்க் காதலன் இனைய கூறலும், அருவி அம் கண் திறந்து, அன்பின் நோக்கினான்; திரு உறை மார்பனும், தெளிவு தோன்றிட, ஒருவகை உணர்வு வந்து, உரைப்பது ஆயினான்: |
எரிகதிர்க் காதலன் - சுடுகின்ற கதிர்களை உடைய சூரியன் மக னான சுக்கிரீவன்; இனைய கூறலும் - இவ்வாறான வார்த்தைகளைச் சொன்ன அளவில்; திரு உறை மார்பனும் - இலக்குமியாம் திருமகள் தங்கிய மார்பினை உடைய இராமனும்; தெளிவு தோன்றிட - தெளிவு பிறக்க; ஒரு வகை உணர்வு வந்து - ஒருவாறு தன் நினைவு வரப் பெற்று; அருவி அம் கண்திறந்து - அருவிபோல் கண்ணீர் பெருக்கும் தன் அழகிய கண்களைத் திறந்து; அன்பின் நோக்கினான் - அன்போடு (சுக்கிரீவனைப்) பார்த்து; உரைப்பது ஆயினான் - பின்வருமாறு பேசலுற்றான். சோர்வடைந்து கண்களை மூடியவண்ணம் இருந்த இராமன் சுக்கிரீவன் கூறியவற்றைக் கேட்டதும் கண்களைத் திறந்து, அன்பொடு பார்த்துப் பேசலானான் என்பதாம். திரு உறை மார்பன் - திருமகள் தங்கிய மார்பினை உடைய திருமாலின் அவதாரமான இராமபிராமன். 'அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்பது திருவாய்மொழி (6-10-10). எரிகதிர் - சூரியன் - வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. காதலன் -மகன். 19 |