இராமன் துயரால் மீண்டு சோர்ந்தது கண்டு சுக்கிரீவன் தேற்றம் 3926. | என்ன நொந்து, இன்னன பன்னி, ஏங்கியே துன்ன அருந் துயரத்துச் சோர்கின்றான்தனை, பன்னஅருங் கதிரவன் புதல்வன், பையுள் பார்த்து, அன்ன வெந் துயர் எனும் அளக்கர் நீக்கினான். |
என்ன நொந்து - என்று மனம் வருந்தி; இன்னன பன்னி - இத்தகைய வார்த்தைகளைச் சொல்லி; ஏங்கி - ஏக்கம் உற்று; துன்ன அரும் துயரத்து - அடைதற்கரி துன்பத்தால்; சோர்கின்றான் தனை - மனம் தளர்கின்ற இராமனை; பன்ன அரும் கதிரவன் புதல்வன் - புனைந்து கூறுதற்கரிய கதிர்களை உடைய சூரியன் மகனான சுக்கிரீவன்; பையுள் பார்த்து - (அவன் அடைந்த) துன்பத்தைப் பார்த்து; அன்ன வெந்துயர் எனும் அளக்கர் - அத்தகைய கொடிய துன்பம் என்கின்ற கடலினின்று; நீக்கினான் - கரை ஏற்றினான். பையுள் - துன்பம், அளக்கர் - கடல். அளத்தற்கரியது எனும் பொருள் தரும். துயரெனும் அளக்கர் - உருவக அணி; பன்னுதல் - திரும்பத்திரும்பச் சொல்லுதல். 26 |