அனுமன், இராமனை நோக்கிப் பேசுதல் 3928. | என்றனன் இராகவன்; இனைய காலையில், வன் திறல் மாருதி வணங்கினான்; 'நெடுங் குன்று இவர் தோளினாய்! கூற வேண்டுவது ஒன்று உளது; அதனை நீ உணர்ந்து கேள்!' எனா, |
என்றனன்இராகவன் - என்று கூறினான் இராமன்; இனைய காலையில்- இந்தச் சமயத்தில்; வன்திறல் மாருதி - மிக்க வலிமை வாய்ந்த அனுமன்; வணங்கினான் - (இராமனைத்) தொழுது; நெடுங் குன்று இவர் தோளினாய்- பெரிய மலையை ஒத்த தோள்களை உடையவனே! கூற வேண்டுவது - 'நான் உன்னிடம் கூற வேண்டியது; ஒன்று உளது - ஒன்று உண்டு; அதனைநீ உணர்ந்து கேள் எனா - அதை நீ கவனித்துக் கேட்பாயாக' என்று . . . . இது முதல் 34வது பாடல் முடியக் குளகமாய் ஒரு தொடராய் இயைந்து வினை முடிபு கொள்ளும். வல்திறல் - ஒரு பொருட் பன்மொழி; இவர்தல் - ஒத்தல். தான் சொல்ல இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்பதால் 'உணர்ந்து கேள்' என்றான். 28 |