3930. | 'வானதோ? மண்ணதோ? மற்று வெற்பதோ? ஏனை மா நாகர்தம் இருக்கைப் பாலதோ? - தேன் உலாம் தெரியலாம்! - தெளிவது அன்று, நாம், ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால்! |
தேன் உலாம் தெரியலாய் - வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலை அணிந்தவனே! வானதோ - (இராவணன் முதலிய அரக்கர் உள்ள இடம்) வானத்தில் உள்ளதோ? மண்ணதோ - மண்ணுலகத்தில் உள்ளதோ?மற்று வெற்பதோ - (அன்றி) வேறு மலைகளிடத்து உள்ளதோ?ஏனை மாநாகர்தம்- இவற்றினும் வேறான பெரிய நாகர்கள் வாழும்; இருக்கைப் பாலதோ - பாதாள உலகில் உள்ளதோ?நாம் - - ; ஊனுடை மானிடம் ஆனதுஉண்மையால் - ஊனால் ஆய மனிதப் பிறவியினராய் இருப்பதால்; தெளிவதுஅன்று- (இன்ன இடத்தது என்று) தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதன்று. மனிதர்களுக்குத் தேவர்களைப்போல இருந்த இடத்திலிருந்து பிற உலகங்களில் நிகழ்வன பற்றி அறிந்து கொள்ளும் திறம் இல்லாமையால் 'மானுடமானது உண்மையால தெளிவது அன்று' என்றான். எனவே, பலர் பல இடங்களுக்குச் சென்று தேட வேண்டியிருப்பதால் பெரும்படை வேண்டும் எனக் குறிப்பாக உணர்த்தினான். வானரரையும் மனித இனத்தின் ஒரு வகையினர் என்ற கருத்தால் 'நாம் ஊனுடை மானுடன்' என இணைத்துக் கூறினான். உருவத்தால் வானரங்களாக இருப்பினும் பேச்சு, செயல் ஆகியவற்றில் மனிதர்களாக இருப்பதாலும் இங்ஙனம் கூறினன் எனலாம். ''விலங்கு அலாமை விளங்கியது; ஆதலால் அலங்கலார்க்கு, ஈது அடுப்பது அன்று ஆம் அரோ'' (4049) என இராமன் வாலியிடம் உரைப்பதை ஒப்பு நோக்கலாம். 'ஊனுடை' என்பதற்குக் 'குறைபாடு உடைய' என்றும் பொருள் கொள்வர். 30 |