3931. | 'எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர், வவ்வுவர், அவ் வழி மகிழ்ந்த யாவையும்; வெவ் வினை வந்தென வருவர், மீள்வரால்; அவ் அவர் உறைவிடம் அறியற்பாலதோ? |
இமைப்பின் - (அவ்வரக்கர்கள்) கண் இமைக்கும் நேரத்தில்; எவ் உலகங்களும் - எல்லா உலகங்களையும்; எய்துவர் - சென்று அடைவர்; அவ்வழி - தான் சென்ற அவ்விடங்களில்; மகிழ்ந்த யாவையும் - தாம் விரும்பிய பொருள்கள் எல்லாவற்றையும்; வவ்வுவர் - வலிந்து கவர்ந்து கொள்வர்; வெவ்வினை வந்தென - (செய்த செயல்களுக்கேற்பப் பயனூட்ட வரும்) கொடிய வினை வந்தது போல; வருவர் - (வருத்த)வருவர்; மீள்வர் - அவ்வினை, பயனை ஊட்டியபின் செல்வது போல, உயிர்களை வருத்திய பின்னர்த் திரும்பிச் செல்வர்; அவ் அவர் உறைவிடம் - அத்தன்மையை உடைய அரக்கர்கள் வாழும் இருப்பிடம்; அறியற்பாலதோ - நம்மால் அறியக்கூடியதோ? (அன்று). அரக்கர் தாம் வேண்டும் இடத்திற்கு வேண்டியபோது சென்று பிறரை வருத்தி மீளும் இயல்பினராதலின் அவர்கள் தங்குமிடம் கணித்தற்கரிதாகின்றது. 'இமைப்பின்' என்பது காலவிரைவைக் காட்டிற்று; இமைப்பு - கண் இமைக்கும் கால அளவு. உயிர்களை அவை செய்தவினை தொடரும் என்பதைச் 'செல்லுறுகதியின் செல்லும் வினை எனச் சென்றதன்றோ' (28); என முன்னும் கூறப்பட்டது. 'தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த கிழவனை நாடிக் கொளற்கு' என்பது (101) நாலடியார். இங்கு அரக்கர்க்கு வெவ்வினை உவமையாயிற்று. 31 |