3932.'ஒரு முறையே பரந்து
      உலகம் யாவையும்,
திரு உறை வேறு
      இடம் தேரவேண்டுமால்;
வரன்முறை நாடிட, வரம்பு
      இன்றால் உலகு;
அருமை உண்டு, அளப்ப அரும்
      ஆண்டும் வேண்டுமால்.

     உலகு வரம்பு இன்று - உலகம் எல்லையற்றதாக விரிந்துள்ளது;
வரன்முறை நாடிட -
(அரக்கர்களை) வரிசைப்படி ஒவ்வோர் இடமாகத்
தேடுவதில்; அருமை உண்டு - இடர்ப்பாடு உண்டு; அளப்ப அரும்
ஆண்டும் வேண்டும் -
(அவ்வாறு தேடுதற்கு) அளவற்ற ஆண்டுகள்
வேண்டும்; ஒரு முறையே - (அதனால்) ஒரே சமயத்தில்; உலகம் யாவை
யும் பரவி -
எல்லா உலகங்களுக்கும் சென்று பரவி; திருஉறை - சீதை
தங்கியிருக்கின்ற; வேறு இடம் - வேறிடத்தை; தேர வேண்டும் - தேடி
அறிய வேண்டும்.

     அரக்கர்கள் கணப்போதில் பல உலகங்களுக்குச் சென்று திரும்புவர்
ஆதலின், ஒரு புறத்தே சென்று சீதையைத் தேடுகையில் அவர்கள் வேறுபுறம்
கொண்டு மறைப்பார்.  ஒவ்வோர் இடமாய்த் தேடிச் செல்ல உலகமும் பெரிது;
தேடுதற்கு ஆண்டுகள் பலவாகும்.  எனவே,  ஒரே நேரத்தில் உலகெங்கும்
பிரிந்து சென்று தேடுதல் வேண்டும் என்று அனுமன் உரைத்தான்.

     திரு என்றது சீதாபிராட்டியை; வரன்முறை - வரிசைப்படி; யாவையும் -
முற்றும்மை.                                                  32