3933. | 'ஏழு பத்து ஆகிய வெள்ளத்து எம் படை, ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால்; ஆழியைக் குடிப்பினும், அயன் செய் அண்டத்தைக் கீழ் மடுத்து எடுப்பினும், கிடைத்த செய்யுமால். |
ஏழு பத்து ஆகிய வெள்ளத்து- எழுபது வெள்ளம் என்ற அளவினை உடைய; எம்படை - எங்கள் வானரப் படை; ஊழியில் கடல் என - யுக முடிவுக் காலத்தில் பொங்கி எழும் கடல் போல; உலகம் போர்க்கும் - உலகம் முழுவதும் பரவி மூடவல்லது; ஆழியைக் குடிப்பினும் - (மற்றும்அது) கடலைக் குடிக்க வேண்டுமென்றாலும்; அயன் செய் அண்டத்தை - நான்முகனால் படைக்கப் பெற்ற பிரமாண்டத்தை; கீழ் மடுத்து எடுப்பினும் - கீழே கையைச் செலுத்திப் பெயர்த்து எடுக்க வேண்டுமென்றாலும்; கிடைத்த செய்யும் - இட்ட கட்டளையை ஏற்றுச் செய்யும். வானரப்படையின் மிகுதியும், ஆற்றலும் கட்டுப்பாடும் இப்பாடலில் உணர்த்தப்பட்டன. வெள்ளம் - ஒரு பேரெண். இவ்வெண்ணிக்கை முன்னரும் 'வெள்ளம் ஏழு பத்து உள்ள' (3831) என அனுமனால் குறிக்கப்பட்டது. வானரப் படைகள் எதையும் செய்யவல்லன என அனுமன் உரைப்பது 'மலை அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே, வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவனே' எனும் (பட்டினப் 271 - 273) கரிகாலன் வீரச்செயலோடு ஒப்பிடத்தக்கது. 33 |