3937.அறங்கள் நாறும் மேனியார்,
      அரிக் கணங்களோடும், அங்கு
இறங்கு போதும், ஏறு போதும்,
      ஈறு இலாத ஓதையால்,
கறங்கு வார் கழல் கலன்
      கலிப்ப, முந்து கண் முகிழ்த்து
உறங்கு மேகம், நன்கு உணர்ந்து,
      மாக மீது உலாவுமே.

     அறங்கள் நாறும் மேனியார் - தருமங்கள் தோன்றுதற்குரிய திரு
மேனியினராகிய இராமலக்குவர்; அரிக்கணங்களோடும் - வானரக்
கூட்டங்களோடு; அங்கு - அம்மலைச் சாரல் வழியில்; இறங்கு போதும்-
இறங்குகின்ற பொழுதும்; ஏறு போதும் -  ஏறுகின்ற பொழுதும்; ஈறு இலாத
ஓதையால் -
எல்லையில்லாத ஓசையோடு; கறங்கு வார்கழல்கலன் -
ஒலிக்கும் இயல்புடைய நீண்ட வீரக்கழல்களாகிய அணிகள்; கலிப்ப -
ஒலித்ததால்; முந்து கண் முகிழ்த்து - முன்பு (அம்மலைகளில்) கண்மூடி;
உறங்கு மேகம் -
உறங்கிக் கொண்டிருந்த மேகங்கள்; நன்கு உணர்ந்து -
நன்றாக விழித்தெழுந்து; மாக மீது உலாவுமே - வானில் எழுந்து
சஞ்சரிக்கும்.

     அறங்கள் நாறும் மேனியர் என்றது இராமலக்குவர்களை.  உலகில்
நல்லறங்களை நிலை நாட்ட அவதரித்தவர்களாதலின் 'அறங்கள் நாறும்
மேனியர்' எனப்பட்டனர்.  'அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்' (1349);
'வேதமும் அறனும் சொல்லும் மெய்யற மூர்த்தி வில்லோன்'' (5882) என்பன
காண்க.  நாறுதல்; தோன்றுதல், விளங்குதல்.

     இவர்கள் ஏறியும் இறங்கியும், கழலணிகள் ஒலிக்க நடந்து வருதலால்
மலைச் சாரல்களில் படிந்து கிடந்த மேகங்கள் சிதறின என்பதை மேகம்
உறக்கம் விழித்து வானில் உலவியதாகக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.
கறங்குதல், கலித்தல் என்பன ஒலித்தல் எனும் பொருளன.           3