3949. எழுந்தனன், வல் விரைந்து
      இறுதி ஊழியில்
கொழுந் திரைக் கடல்
      கிளர்ந்தனைய கொள்கையான்;
அழுந்தியது, அக் கிரி; அருகில்
      மால் வரை
விழுந்தன, தோள் புடை
      விசித்த காற்றினே.

     ஊழி இறுதியில் - ஊழி இறுதியாகிய யுக முடிவில்; கொழுந்
திரைக்கடல் -
பெரிய அலைகளோடு கூடிய கடல்; கிளர்ந்தனைய -
பொங்கி எழுந்தாற்போன்ற; கொள்கையான் - செருக்குடையவனாய் (வாலி);
வல் விரைந்து எழுந்தனன் -
(சுக்கிரீவனை அழிக்கும் பொருட்டு)
மிகவிரைந்து எழுந்தான்; அக்கிரி அழுந்தியது- (அவன் எழுந்த வேகத்தால்)
அந்தக் கிட்கிந்தைமலை நிலத்தினுள்ளே அழுந்தியது; தோள்புடை விசித்த
காற்றின்
- (அவன்) தோள்களைப் பக்கங்களில் அசைத்து எழுப்பிய
காற்றினாய்; அருகில் மால்வரை - (அந்த மலையின்) அருகில் இருந்து
பெரிய மலைகள்; விழுந்தன - நிலை பெயர்ந்து கீழே விழுந்தன.

     இறுதி ஊழியில் என்பதனை ஊழி இறுதியில் எனக் கொள்க.  கொள்கை
யான் - வீரமிகுதி, செருக்கு உடையான்.  வல் - விரைவை உணர்த்தும்
இடைச் சொல்.  வல்விரைந்து - ஒரு பொருட் பன்மொழி.  நிலத்தில் கிரி
அழுந்துதலும், மால்வரைகள் விழுதலும் வாலியின் சினமிகுதியினையும்
ஆற்றலையும் உணர்த்தும்.  உயர்வு நவிற்சி அணி.                    15