3953. | வீசின காற்றின் வேர் பறிந்து, வெற்புஇனம் ஆசையை உற்றன; அண்டப் பித்திகை பூசின, வெண் மயிர் பொடித்த வெம் பொறி; கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே. |
வீசின காற்றின் - (வாலி எழுந்த வேகத்தால்) வீசின காற்றினால்; வெற்பு இனம் - மலைக் கூட்டங்கள்; வேர் பறிந்து - நிலை பெயர்ந்தவனாய்; ஆசையை உற்றன - திசையின் எல்லையை அடைந்து வீழ்ந்தன; வெண்மயிர் பொடித்த வெம்பொறி - (மேனியில் அடர்ந்துள்ள) வெண்மை வாய்ந்த மயிர்க்கால் தொறும் தோன்றிய வெம்மையுடைய அனற்பொறிகள்; அண்டப் பித்திகை பூசின- அண்டப்பரப்பின் மதிற் சுவரை மறைத்தன; அந்தகன் கூசினன் - (இவ்வாறு சினத்துடன் வரும் வாலியைக்காண) யமனும் கண் கூசினான்; உம்பர் குலைந்தது - தேவர்களும் நிலை குலைந்தனர். இப்பாடல் வாலியின் வேகத்தையும் சினமிகுதியையும் விளக்கும். வெண் மயிர் பொடித்த வெம்பொறி - மயிர்க்கால்களில் இருந்து எழுந்த தீப்பொறிகள். 'அண்டப் பித்திகை பூசின' என்றதால் அண்டச்சுவர்கள் வரை இவன் சினத்தீப் பொறிகள் சென்று ஒளி வீசின என்பதாம். உம்பர் - மேல் உலகம்; இடவாகு பெயராய்த் தேவர்களைக் குறிக்கும். அந்தகன். உயிர்கட்கு அந்தத்தைச் செய்வோனாகிய இயமன். 19 |