3954. | கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின; தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின, வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு அரோ. |
கடித்த வாய் எயிறு உரு - (வாலி வெகுண்டு) கடித்த வாயிலிலுள்ள பற்களினின்று வெளிப்பட்ட; கனல்கள் - தீப்பொறிகள்; கார்விசும்பு இடித்தவாய்- கரிய மேகங்கள் விசும்பிடத்து ஒன்றோடொன்று மோதிய நிலையில்; உகும் உரும் இனத்தின் - விழும் இடிகளின் கூட்டம் போல; சிந்தின - எங்கும் சிதறின.வடித்த தோள் வலயத்தின் - (அவன் தோள்தட்டி ஆர்த்த நிலையில்) சிறந்த அவன் தோள் வளைகளில்; வயங்கு காசு - விளங்குகின்ற இரத்தினங்கள்; தடித்து வீழ்வன என - மின்னல்கள் கீழே விழுந்தாற்போல; தகர்ந்து சிந்தின - சிதறி வீழ்ந்தன. எயிறு தோன்றப் பற்களைக்கடித்தல் - வெகுளியில் தோன்றும் மெய்ப் பாடு. காசு- இரத்தினம். 'தப்பின மணி, காசும், சங்கமும் மயிலன்னார்' (1189) 'திறம் செய் காசு ஈன்ற சோதி' (1129) என்னும் இடங்களில் இரத்தினம் எனும் பொருளில் 'காசு' ஆளப்பட்டுள்ளமை காண்க. தடித்து - மின்னல். வாலியின் வெகுளி மிகுதியை உயர்வு நவிற்சியால் கூறிய பாடல். அரோ -அசை. 20 |