3957. | 'விலக்கலை; விடு; விடு; விளித்துளான் உரம் கலக்கி, அக் கடல் கடைந்து அமுது கண்டென, உலக்க இன் உயிர் குடித்து, ஒல்லை மீள்குவல், மலைக் குல மயில்!' என, மடந்தை கூறுவாள்: |
மலைக்குல மயில்! - மலையில் வாழும் சிறந்த மயில் போன்ற வளே! விலக்கலை - என்னைத் தடை செய்யாதே; விடு விடு- என்னை விட்டுவிடு; அக்கடல் கடைந்து - அந்தப் பாற்கடலைக் கடந்து; அமுது கண்டென - அமுதை எடுத்தாற்போல; விளித்துளான் உரம் கலக்கி - என்னைப் போருக்கு அழைத்த அச்சுக்கிரீவனின் வலிமையைக் குலையச் செய்து; உலக்க இன் உயிர் குடித்து - (அவன்) அழகிய (அவனது) இனிய உயிரைப் பருகி; ஒல்லை மீள்குவல் - விரைவில் திரும்பி வருவேன்; என - என்று (வாலி) கூற; மடந்தை கூறுவான் - தாரை சொல்வாள். மயில் - உவமை ஆகுபெயராய்த் தாரையைக் குறித்தது. மயில் குறிஞ்சி நிலத்துப்பறவையாதலின், மலையில் வாழும் தாரைக்கும் ஏற்கும். மலைக்குல மயில் - அண்மைவிளி. விலக்கலை - எதிர்மறை ஏவல் வினைமுற்று; விடுவிடு- விரைவு பற்றி வந்த அடுக்குத் தொடர். உயிர் குடித்து - அச்செயலின் எளிமையைக் குறிக்கக் கூறப்பட்டது. உண்ணப்படாதது உண்ணப்படுவது போலச் சொல்லப்பட்டது மரபுவழுவமைதி. இலக்கணை என்றும் கூறலாம். அக்கடல் - அகரம் பண்டறிசுட்டு. 23 |