3958.'கொற்றவ! நின் பெருங்
      குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள்,
      ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந் திறல்;
      பெயர்த்தும் போர் செயற்கு
உற்றது, நெடுந் துணை
      உடைமையால்' என்றாள்.

     கொற்றவ - (தாரை வாலியை நோக்கி) வெற்றியை உடைய அரசனே!
நின்பெருங் குவவுத் தோள் -
உன்னுடைய பெருமை மிக்க திரண்ட
தோள்களின்; வலிக்கு - வலிமைக்கு; முன்னைநாள் - முன்; இற்றனன் -
வலிமை அழிந்து; ஈடு உண்டு ஏகினான் - வருத்தமுற்றுச் சென்றவனான
சுக்கீவன்; பெருந்திறல் பெற்றிலன் - (நின்னை எதிர்த்துப் போர் செய்ய)
பேராற்றலைப் புதிதாகப் பெற்றானில்லை; பெயர்த்தும் போர்செயற்கு -
(அவ்வாறாக) மீண்டும் உன்னோடு போர்செய்வதற்கு; உற்றது - வந்துற்றமை;
நெடுந்துணை உடைமையால்
- பெரிய ஒரு துணையினைப்
பெற்றமையாலாகும்; என்றாள் - என்று சொன்னாள்.

     நாட்டையும் ஆளும் தகுதியும் திறலும் உடையவனாதலின் தாரை
வாலியைக் 'கொற்றவ' என விளித்தாள்.  குவவு - திரட்சி; ஈடு உண்டு -
வருத்தமுற்று. ஈடு - வருத்தம்.  'ஈடினால் இருந்தெண்ணி' என்பது சிந்தாமணி
(1762).  நெடுந்துணை - துன்பம் மிக்க காலத்திலும் நீங்காது நெடிது நின்று
உதவும் துணை; ஈண்டு இராமனைக் குறிக்கும்.  பெயர்த்தும் போர்செயற்கு
உற்ற காரணத்தை ஊகித்தறியும் தாரையின் அறிவுத்திறன் ஈண்டு
நோக்கத்தக்கது.                                                24