3962. | 'ஆற்றல் இல் அமரரும், அவுணர் யாவரும், தோற்றனர்; எனையவர் சொல்லற்பாலரோ? கூற்றும், என் பெயர் சொலக் குலையும்; ஆர், இனி மாற்றவர்க்கு ஆகி வந்து, எதிரும் மாண்பினார்? |
ஆற்றல் இல் அமரரும் - வலிமையில்லாத தேவர்களும்; அவுணர் யாவரும் - அசுரர்கள் எல்லோரும்; தோற்றனர் - தோற்றுப் போனவர்கள்; எனையவர் - எத்தனை பேராவர்; சொல்லற்பாலரோ? - (என்று) சொல்லும் தன்மையர் ஆவரோ?கூற்றும் - யமனும்; என் பெயர் சொல - என் பெயரைப் பிறர் சொல்லக் கேட்டால்; குலையும் - நடுங்குவான். மாற்றவர்க்கு ஆகிவந்து - (அதனால்) எனது பகைவனான சுக்கிரீவனுக்குத் துணையாகி வந்து; எதிரும் மாண்பினார் - என்னைப் போரில் எதிர்க்கும் திறமையுடையவர்; இனி ஆர் - இனியார் உள்ளனர்? (ஒருவரும் இலர்). வாலி தன் வீரமிகுதியைத் தாரைக்கு உரைத்தனன். தேவர்களையும், அசுரர்களையும், யமனையும் அஞ்சுமாறு செய்யும் அவனை எதிர்க்கக்கூடியவர் எவரும் இரார் என்பதால் 'எதிரும் மாண்பினார் ஆர்?' எனத் துணிந்து பேசினான். கூற்றும் - உயர்வு சிறப்புஉம்மை. 28 |