போரை விரும்பிய வாலி குன்றின் புறத்தே வருதல்

கலித்துறை

3971. ஒல்லை, செரு வேட்டு, உயர்
      வன் புய ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால்
      இவர்கின்ற இரண்டினோடும்,
மல்லல் கிரியின்தலை வந்தனன்,
      வாலி - கீழ்பால்,
தொல்லைக் கிரியின்தலை தோற்றிய
      ஞாயிறு என்ன.

     வாலி - (இவ்வாறு தாரைக்கு ஆறுதல் கூறிய) வாலி; ஒல்லை -
விரைவில்; செருவேட்டு- போரை விரும்பி; உயர் - (அப்போர்
விருப்பத்தால்) உயர்ந்து; உம்பர் எல்லைக்கும் அப்பால்- தேவர் உலகின்
எல்லைக்கு அப்பாலும்; இவர்கின்ற - கிளர்ந்து ஓங்கிய; வன்புய ஓங்கல்
இரண்டினோடும்
- வலிய தோள்களாகிய மலைகள் இரண்டினோடு; கீழ்பால்
- கிழக்குத் திசையில்; தொல்லைக் கிரியின்தலை - பழமையான உதயகிரி
என்னும் மலையின் உச்சியில்; தோற்றிய ஞாயிறு என்ன - தோன்றிய
சூரியனைப் போல; மல்லல் கிரியின்தலை - வளம் பொருந்திய அந்த
மலையின் மேல்; வந்தனன் - வந்து தோன்றினான்.

     வீரர்களுக்குப் போர் என்று கேட்டதும் தோள்கள் பூரித்து
விளங்குமாதலின் 'செருவேட்டு உயர் வல்புயம்' என்றார். 'போர் என்ன
வீங்கும் பொருப்பு அன்ன பொலங்கொள் திண்தோள்' (907) என்றதும் காண்க.
ஒல்லை - இடைச்சொல்; தோள்களாகிய இரண்டு மலைகளுடன் ஒரு மலையின்
தலையில் உதயகிரியின் தலை தோன்றும் சூரியன் போலத் தோன்றினான் என
நயம்படக் கூறியுள்ளமை காண்க. வாலிக்குச் சூரியன் உவமை. புய ஓங்கல் -
தோளாகிய மலை, உருவகம். நாளும் தோன்றும் பழமையுடைய மலையாதலின்
'தொல்லைக் கிரி' எனப்பட்டது. பல வளங்கள் கொண்டதாதலின் வாலிக்குரிய
மலை 'மல்லல் கிரி' எனப்பட்டது. சூரியன் மைந்தன் எதிரே சூரியன் போல்
வாலி தோன்றினான் என்ற முரண் நயம் நோக்கத்தக்கது.               37