வாலி - சுக்கிரீவன் போர்

3979.வீரத் திறலோர், இவை
      இன்ன விளம்பும் வேலை,
தேரில் திரிவான் மகன், இந்திரன்
      செம்மல், என்று இப்
பாரில் திரியும் பனி மால்
      வரை அன்ன பண்பார்,
மூரித் திசை யானை
      இரண்டு என, முட்டினாரே.

     வீரத் திறலோர் - வீரமும் போர்த்திறமும் வாய்ந்த இராலக்குவர்;
இன்ன இவை விளம்பும் வேலை -
இத்தன்மையனவான சொற்களைப்
பேசிக்கொண்டிருக்கையில்; தேரில் திரிவான் மகன் - தேர் மீதேறி வானம்
எங்கும் சுற்றித் திரிபவனான சூரியன் மகனான சுக்கிரீவன்; இந்திரன்
செம்மல்-
இந்திரன் மகனான வாலி; என்று - எனக் கூறப்பெற்று; இப்
பாரில் திரியும்-
இந்த உலகில் சுற்றித் திரியும்; பனிமால் வரை அன்ன -
குளிர்ந்த பெரியமலை போன்ற; பண்பார் - தன்மையினராய (சகோதரர்கள்);
மூரித்திசையானை இரண்டு என - வலிமை மிக்க திசை யானைகள்
இரண்டு எதிர்த்தாற்போல; முட்டினார் - ஒருவரோடொருவர் மோதிப்
போர் புரிந்தனர்.

     மலைபோல் பெருந்தோற்றமுடைய வாலி சுக்கிரீவர் திசை யானைகள்
இரண்டு மோதிக் கொண்டது போல் மோதிக் கொண்டனர். மலையும், திசை
யானைகளும் உவமை. தேரில் திரிவான் மகன் - சுக்கிரீவன், இந்திரன்
செம்மல் - வாலி.  இருவரும் வெண்ணிற மேனியராதலின் 'பனி மால் வரை
அன்ன பண்பார்' என்றார். பாரில் திரியும் பனிமலை இருப்பின்  அதை
போன்ற பண்பார் என்பதில் இல்பொருள்உவமை.                  45