3987. | வெவ் வாய எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப, மீச் சென்று, அவ் வாய் எழு சோரிஅது, ஆசைகள்தோறும் வீச, எவ் வாயும் எழுந்த கொழுஞ் சுடர் மீன்கள் யாவும், செவ்வாயை நிகர்த்தன; செக்கரை ஒத்த, மேகம். |
மிடல் வீரர் - வலிமையையுடைய வாலி சுக்கிரீவர்; மீச் சென்று - ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து; வாய் வெம் எயிற்றால் கடிப்ப - தம் வாயிலுள்ள கொடிய பற்களால் ஒருவரையொருவர் கடித்ததால்; அவ்வாய் எழு சோரி அது - கடித்த அவ்விடங்களிலிருந்து பெருகிய இரத்தமானது; ஆசைகள் தோறும் வீச - எல்லாத் திசைகளிலும் தெறித்ததால்; எவ்வாயும் எழுந்த - வானத்தில் எல்லாவிடங்களிலும் தோன்றிய; கொழுஞ்சுடர் மீன்கள்யாவும் - மிக்க ஒளியையுடைய விண்மீன்கள் எல்லாம்; செவ்வாயை நிகர்த்தன - (தம்மீது குருதி பட்டதால் தம் இயல்பான நிறம் மாறி) செவ்வாய் என்னும் கோளினை ஒத்து விளங்கின; மேகம் செக்கரை ஒத்த - மேகங்கள் செவ்வானத்தை ஒத்து விளங்கின. கடித்த இடங்களிலிருந்து பெருகிய குருதியின் மிகுதி கூறப்பெற்றது. செவ்வாய் - நவக்கிரங்களில் ஒன்று. சிவந்த நிறமுடையது. சோரி அது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. செக்கர் - செவ்வானம். இது செக்கல் என்ற சொல்லின் ஈற்றுப் போலி; பின் பண்பாகு பெயராய்ச் செவ்வானத்தைக் குறித்தது. 53 |