3992.மண்ணகத்தன மலைகளும்,
      மரங்களும், மற்றும்
கண்ணகத்தினில் தோன்றிய
      யாவையும், கையால்,
எண் நகப் பறித்து
      எறிதலின், எற்றலின், இற்ற,
விண்ணகத்தினை மறைத்தன; மறி
      கடல் வீழ்ந்த.

     மண்ணகத்தன மலைகளும்- நிலத்தில் இருப்பனவாகிய மலை
களையும்; மரங்களும் - மரங்களையும்; மற்றும் கண்ணகத்தில் தோன்றிய -
மேலும் கண்களில் பட்ட; யாவையும் - எல்லாப் பொருள்களையும்; கையால்-
(அவர்கள்) தத்தம் கைகளால்; எண் நகப் பறித்து எறிதலின் - வலிமை
விளங்கப் பெயர்த்தெடுத்து வீசி எறிந்ததனாலும்; எற்றலின் - (அவற்றால்)
தாக்கியதாலும்; இற்ற - (அம்மலை முதலியன) முறிந்தவனாய்;
விண்ணகத்தினை மறைத்தன-
விசும்பிடத்தை மறைத்தன; மறிகடல் வீழ்ந்த-
மேலும் மடங்கி விழும் அலைகளை உடைய கடலில் அவை வீழ்ந்தன.

     எண் - ஈண்டு உள்ளத்தின் திண்மையைக் குறித்து நின்றது.  பறித்தல் -
வேருடன் பெயர்த்தெடுத்தல்.  வானமெங்கும் பரவி நிறைதலால்
'விண்ணகத்தினை மறைத்தன' என்றார்.  'மண்ணகத்தன' என்பதை
மரங்களுக்கும் இயைக்கலாம்.  கண் அகத்தில் - கண் முன்னிலையில்
என்றபடி.                                                     58