3997. அயிர்த்த சிந்தையன், அந்தகன்
      குலைகுலைந்து அஞ்ச,
செயிர்த்து  நோக்கினன்; சினத்தொடு
      சிறு நகை செய்யா,
வயிர்த்த கையினும், காலினும்
      கதிர்மகன் மயங்க,
உயிர்த் தலந்தொறும் புடைத்தனன்;
      அடித்தனன்; உதைத்தான்.

     அயிர்த்த சிந்தையன் - (தோற்றோடியவன் மீண்டும் வந்தது எப் படி
என்று) ஐயுற்று மனத்தினனாகிய வாலி; அந்தகன் குலை குலைந்து அஞ்ச -
யமனும் மனம் கலங்கி அஞ்சுமாறு; செயிர்த்து நோக்கினன் - (சுக்கிரீவனை)
வெகுண்டு நோக்கியவனாய்சினத்தொடு சிறுநகை செய்யா - கோபத்தோடு
(இகழ்வாக) முறுவலித்துச் சிரித்து; வயிர்த்த கையினும் காலினும் - திண்மை
மிக்க தன் கைகளாலும் கால்களாலும்; கதிர்மகன் மயங்க - கதிரவன்
மகனாகிய சுக்கிரீவன் மயக்கமடையுமாறு; உயிர்த்தலந்தொறும் - (அவனது)
உயிர் நிலையில் எல்லாம்; புடைத்ததன் - குத்தினான்; அடித்தனன் -
அடித்தான்; உதைத்தான்

     அயிர்த்த சிந்தையன் - தோற்றோடிய சுக்கிரீவன் மீண்டும் வந்து
போர்புரியக் காரணம், தன்னை வெல்லுவதற்குப் பெருந்துணை வலிமை
பெற்றமையாலோ என்று ஐயுற்று மனநிலையைக் குறிக்கும்.  குலை குலைதல் -
மனம் நடு நடுங்கல்.  வயிர்த்த திண்மை, வயிரத்தின் தன்மைவாய்ந்த திண்மை.
கதிர் - சூரியன்; கதிர் - ஒளி; பண்பாகுபெயராய்க் கதிரவனைக் குறித்தது.
கையினும் காலினும் புடைத்தனன், அடித்தனன், உதைத்தான் என்பது நேர்
நிரல் நிறை அணி.  கையில் புடைத்தனன், அடித்தனன் எனவும் காலில்
உதைத்தான் எனவும் நிரலே இயைக்க.  சிறுநகை இகழ்ச்சி பற்றியது.
சிறுநகை செய்யா - சிரித்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
                                                           63