3998. | கக்கினான்உயிர், உயிர்ப்பொடும்; செவிகளின், கண்ணின், உக்கது, ஆங்கு, எரிப் படலையோடு உதிரத்தின் ஓதம்; திக்கு நோக்கினன், செங் கதிரோன் மகன்; செருக்கிப் புக்கு, மீக் கொடு நெருக்கினன், இந்திரன் புதல்வன். |
ஆங்கு - அப்பொழுது; செங்கதிரோன் மகன் - சிவந்த கதிர்களை உடைய சூரிய மைந்தனாம் சுக்கிரீவன்; உயிர்ப்பொடும் உயிர் கக்கினான் - பெரு மூச்சுடனே உயிரைக் கக்கலானான்; செவிகளின் கண்ணின் - (அவனது) காதுகளிலிருந்தும் கண்களிலிருந்தும்; எரிப் படலையோடு - நெருப்புத் தொகுதியோடு; உதிரத்தின் ஓதம் - குருதி வெள்ளம்; உக்கது - சிந்தியது; திக்கு நோக்கினான் - (அதனால் செயலற்றவனாய் இராமன் உள்ள) திசையை நோக்கினான்; இந்திரன் புதல்வன் - இந்திரன் புதல்வனாகிய வாலி; செருக்கி - செருக்குற்று; புக்கு மீக் கொடு நெருக்கினன் - மேல்மேலும் தாக்கி வருத்திக் கொண்டிருந்தான். உயிர்ப்பொடும் உயிர் கக்கினான் - உயிர் போய் விடும் என்னும்படி பெருமூச்சு விடலானான் என்பதாம். வாலியை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாதவனாய் இராமனது உதவியை நாடி அவனுள்ள திசை நோக்கித் தன் நிலையைப் புலப்படுத்தவே 'திக்கு நோக்கினான்' என்றார். 64 |