சுக்கிரீவனை வாலி மேலே தூக்கலும், இராமன் அம்பு செலுத்தலும் 3999. | 'எடுத்துப் பாரிடை எற்றுவேன், பற்றி' என்று, இளவல் கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள் மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி, தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். |
பற்றி எடுத்துப் பாரிடை எற்றுவென் - (இவனைப்) பிடித்து எடுத்துத்தரையில் மோதுவேன்; என்று - என்று எண்ணி; இளவல் - தன் தம்பியான சுக்கிரீவனது; கடித்தலத்தினும் - இடையிலும்; கழுத்தி னும் - கழுத்திலும்; தன் இரு கரங்கள் மடுத்து - தனது கைகள் இரண்டையும் செலுத்தி; மீக் கொண்ட வாலிமேல் - (அவனை) மேலே தூக்கியவாலியின் மேல்; இராகவன் - இரகு குலத் தோன்றலாகிய இராமன்; கோல்ஒன்று வாங்கி - அம்பொன்றை எடுத்து; தொடுத்து - வில்லில் பூட்டி; நாணொடு தோள் உறுத்து - வில்லின் நாணுடன் (தனது) தோளைப் பொருந்துமாறு செய்து; துரந்தான் - செலுத்தினான். இடையில் ஒரு கையினையும் கழுத்தில் ஒரு கையினையும் கொடுத்துச் சுக்கிரீவனை மேலே எடுத்துப் பூமியில் மோதிக் கொல்ல முயல்கையில் இராமன் வாலியின் மேல் அம்பைத் தொடுத்தான் என்பதில் சுக்கிரீவன் உயிரைக் காக்க வேண்டி தேவை இராமனுக்கு ஏற்பட்டதை உணரமுடிகிறது. இளவல் - தம்பி; அல் - பெயர் விகுதி. கடிதலம் என்பது எதுகை நோக்கி, தகரவொற்று இரட்டித்தது. கோல் - அம்பு. 65 |