சாய்ந்தான் வாலி 4001. | அலங்கு தோள் வலி அழிந்த அத் தம்பியை அருளான். வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி, கலங்கி, வல் விசைக் கால் கிளர்ந்து எறிவுற, கடைக்கால் விலங்கல் மேருவும் வேர் பறிந்தாலென, வீழ்ந்தான்.* |
அலங்கு தோள் வலி அழிந்த - விளங்கும் தோள் வலிமை அழிந்து போன; அத்தம்பியை அருளான் - அந்தத் தம்பியின் மீது இரக்கம் கொள்ளாதவனாகி; வலம் கொள் பாரிடை - வலிமை கொண்ட நிலத்தில்; எற்றுவான் உற்ற - மோதிக் கொல்ல முற்பட்ட; போர்வாலி - போரிடுதலில் சிறந்த வாலியானவன்; கலங்கி - (அம்பு பட்டவுடன்) நிலை கலங்கி; கடைக்கால் - ஊழிக்கால இறுதியில்; வல் விசைக் கால்- வலிய வேகத்துடன் கூடிய பெருங்காற்று; கிளர்ந்து எறிவுற - எழுந்து வீசுவதால்; விலங்கல் மேருவும் - (நிலத்தினைத் தாங்கும்) மேரு என்னும் மலையும்; வேர் பறிந்தாலென - வேர் பறிக்கப்பெற்று விழுந்தது போல; வீழ்ந்தான் - (நிலத்தில்) விழுந்தான். கடைக்கால் - யுக முடிவாகிய ஊழிக்காலம். மேருவும் - உயர்வு சிறப்பும்மை. ஊழிக்காலக் காற்று இராமன் அம்பியின் வலிமைக்கும் வேகத்திற்கும், மேருமலை வாலியின் பருமனுக்கும் வலிமைக்கும் உவமைகள். 67 |