4004. எற்றும் கையினை நிலத்தொடும்;
      எரிப் பொறி பறப்ப,
சுற்றும் நோக்குறும்; சுடு
      சரம்தனைத் துணைக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும்
      வலி உற, பறிப்பான்
உற்று, உறாமையின் உலைவுறும்;
      மலை என உருளும்.

     கையினை நிலத்தொடும் எற்றும் - (மேலும்) வாலி தன் கைகளை
நிலத்தோடு மோதுவான்; எரிப் பொறி பறப்ப - (தன் கண்களிலிருந்து)
நெருப்புப் பொறி பறக்கும்படி; கற்றும் நோக்குறும் - நாற்புறமும் சுற்றிப்
பார்ப்பான்; சுடு சரம்தனை - தன்னை வருத்திய அம்பினை; துணைக்
கரத்தால் பற்றி
- தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு; வாலினும்
காலினும்
- வாலினாலும கால்களினாலும்; வலி உறப் பறிப்பான்-
வலிமையுறப் பறிக்க; உற்று - முயன்று; உறாமையின் - (அம்பைப்) பறிக்க
முடியாமையால்; உலைவுறும்- வருந்துவான்; மலை என உருளும் - மலை
புரள்வது போல் (வலி தாங்காமல்) நிலத்தில் புரள்வான்.

     அம்புபட்ட நிலையில் வேதனை தாங்காமல் வாலி செய்யும் செயல்கள்
இப்பாடலில் கூறப்பட்டுள்ளன.  சுடுசரம் - நெருப்புப்போல் உட்புகுந்து
எரிக்கும் அம்பு.  தாடகை வதைப்படலத்தில் 'சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடுசரம்' (388) எனக் கூறப்பெறும்.  பறிப்பான் - பானீற்று வினையெச்சம்.
சுடுசரம் - வினைத்தொகை.                                      70