மார்பினின்று அம்பை வாலி பறித்தபோது இரத்த வெள்ளம் பெருகுதல் 4009. | ஓங்கு அரும் பெருந் திறலினும், காலினும், உரத்தின் வாங்கினான், மற்று அவ் வாளியை, ஆளிபோல் வாலி. ஆங்கு நோக்கினர், அமரரும் அவுணரும் பிறரும், வீங்கினார்கள் தோள்;- வீரரை யார் வியவாதார்? |
ஆளி போல் வாலி - ஆண்சிங்கம் போன்ற வாலி; ஓங்கு அரும் பெருந்திறலினும் - உயர்ந்த, அரிய பெரிய ஆற்றலினாலும்; காலினும் - கால்களினைப் பயன்படுத்தியும்; அவ்வாளியை - அந்த அம்பினை; உரத்தின் வாங்கினான் - மார்பினின்று பிடுங்கினான்; ஆங்கு நோக்கினர் - அங்கு அதைப் பார்த்தவர்களான; அமரரும் அவுணரும் பிறரும் - தேவர்களும், அசுரர்களும், மற்றவர்களும்; தோள் வீங்கினார்கள் - தோள்கள் பூரிக்கப் பெற்றார்கள்; வீரரை யார் வியவாதார் - வீரர்களை வியந்து பாராட்டாதவர்கள் யார்? (யாருமில்லை என்றபடி). இராம பாணத்தைப் பறித்தெடுத்த வாலியின் ஆற்றலை 'ஓங்கு அரும் பெருந்திறல்' எனக் கம்பர் பாராட்டுதல் காண்க. வீரர்களை வேறுபாடின்றி யாவரும் பாராட்டுவர் ஆதலின் 'வீரரை யார் வியவாதார்?' என்றார். வேற்றுப்பொருள் வைப்பணி. மற்று - அசை. 75 |