4010. மோடு தெண்திரை முரிதரு
      கடல் என முழங்கி
ஈடு பேர் உலகு இறந்துளது
      ஆம் எனற்று எளிதோ?
காடு, மா நெடு விலங்கல்கள்,
      கடந்தது; அக் கடலின் -
ஊடு போதல் உற்றதனை
      ஒத்து உயர்ந்துளது உதிரம்.

     காடு, மாநெடும் விலங்கல்கள் - காடுகளையும், மிகப் பெரிய
மலைகளையும்; கடந்தது - தாண்டியதாய்; அக்கடலின் ஊடு போதல் -
அந்தக் கடலில் சென்று சேர; உற்றதனை ஒத்து - தொடங்கியதைப் போன்று;
உயர்ந்துளது உதிரம் -
(வாலியின் மார்பினின்று) உயர்த்தெழுந்த
இரத்தவெள்ளம்; மோடு தெண் திரை - உயர்ந்த தெளிந்த அலைகள்;
முரிதரு கடல் என முழங்கி -
மடங்கப் பெற்ற கடல் போல
ஆரவாரம் செய்து கொண்டு; ஈடு பேர் உலகு - வலிய, பெரிய (பல)
உலகங்களை; இறந்துளது ஆம் எனற்கு எளிதோ - கடந்து சென்றதாம்
என்று கூறுவதற்குரிய எளிமையுடையதாகுமோ?

     வாலி அம்பினைப் பறித்து எடுத்த அளவில் மார்பினின்று பெருகிய
குருதி வெள்ளம் காடு மலைகளைக் கடந்து சென்றது; கடல்போல் முழங்கிப்
பல உலகங்களைக் கடந்து சென்றது.  குருதிப் பெருக்கின் மிகுதியைப் பாடல்
புலப்படுத்துகிறது.  உயர்வு நவிற்சி அணி.  மோடு - உயர்ச்சி; ஈடு -
பெருமை- அக்கடல் 'அ' உலகறி சுட்டு.                          76