4015.வெள்கிடும்; மகுடம் சாய்க்கும்;
      வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
உள்கிடும்; 'இதுவும்தான் ஓர் ஓங்கு
      அறமோ?' என்று உன்னும்;
முள்கிடும் குழியில் புக்க மூரி
      வெங் களி நல் யானை
தொள்கொடும் கிடந்தது என்ன, துயர்
      உழந்து அழிந்து சோர்வான்.

     வெள்கிடும் - (வாலிதன் நிலையை எண்ணி) நாணம் கொள்வான்;
மகுடம் சாய்க்கும் -
(நாணத்தால்) கிரீடம் அணிந்த தலையைச் சாய்ப்பான்;
வெடிபடச் சிரிக்கும் -
வெடிப்பதுண்டது போல சிரிப்பான்; மீட்டும்
உள்கிடும் -
நடந்ததைக் குறித்து மீண்டும் சிந்திப்பான்; இதுவும்  நான் ஓர்
ஓங்கு அறமோ -
'இப்படி அம்பு செலுத்துதலும் ஒரு சிறந்த தருமமாகுமோ?'
என்று உன்னும் - என்று எண்ணுவான்.  முள்கிடும் குழியில் - முழுகி
அழுந்தத் தக்க படுகுழியில்; புக்க மூரி வெங் களி நல் யானை - (வீழ்ந்து)
அகப்பட்டு கொண்ட வலிய கொடிய மதங் கொண்ட சிறந்த யானை;
தொள்கொடும் கிடந்தது என்ன -
சேற்றுடன் கிடந்தது போல; துயர்
உழந்து அழிந்து சோர்வான் -
துன்புற்று தன் வலிமை அழிந்து தளர்ச்சி
அடைவான்.

     வீழ்ந்த வாலியின் மனநிலையைப் பாடல் புலப்படுத்தும்.  இராமன்
அறத்தின் வடிவம் என்று வாலி எண்ணியதால் 'இப்படி அம்பு செலுத்துவதும்
ஒரு சிறந்த அறமாகுமா?' என எண்ணி மயங்கினான்.  முள்கிடுங்குழி -
பெரும் பள்ளம், படுகுழி.  யானை பிடிப்போர், பள்ளம் தோண்டிப் பழக்கிய
பெண் யானையை ஒருபுறம் நிறுத்தி வைக்க, ஆண் யானை, பிடியைச் சேரும்
ஆர்வத்தில் விரைந்து வந்து குழியி்ல் விழ; அதனைப்பிணித்து மேலேற்றிச்
செல்வர்.  அவ்வாறு இராமன் செய்த தந்திரத்தால் வாலி அகப்பட்டு
வருத்தலாயினன்.  உவமை அணி.  தொள்கு - சேறு; வலை எனலுமாம்.  முன்
பாடலில் புன்சிரிப்புச் (நகை வர) சிரித்தவன் இங்கு வெடிபடச் சிரித்தான்
என்றது காண்க.                                                81