4025. 'இருவர் போர் எதிரும்காலை,
     இருவரும நல் உற்றாரே;
ஒருவர்மேல் கருணை தூண்டி,
      ஒருவர்மேல், ஒளித்து நின்று,
வரி சிலை குழைய வாங்கி,
      வாய் அம்பு மருமத்து' எய்தல்
தருமமோ? பிறிது ஒன்று ஆமோ?
      தக்கிலது என்னும் பக்கம்.

     இருவர் போர் எதிரும் காலை - இருவர் தம்முள் எதிர்த்துப் போர்
செய்து கொண்டிருக்கும் நேரத்தில்; இருவரும் நல் உற்றாரே -
அவ்விருவரும் (மூன்றாமவருக்கு) நல்ல உறவினரே யாவர்; ஒருவர் மேல்
கருணை தூண்டி -
(அவ்வாறிருக்க) அவ்விருவருள் ஒருவர் மீது அருளைச்
செலுத்தி; ஒருவர் மேல் ஒளித்து நின்று - மற்றொருவர்மீது குழையும்படி
வளைத்து; வாய் அம்பு மருமத்து எய்தல் - கூர்மையான நுனியுடைய
அம்பினை மார்பில் செலுத்துதல்; தருமமோ - அறமாகுமா? பிறிது ஒன்று
ஆமோ -
அன்றி அறத்திற்கு மாறுபட்டதாகுமா?தக்கலிது என்னும்
பக்கம்-
அச்செயல் தகுதியில்லாதது என்னும் பக்கமே சேர்வதாகும்.

     இருவர் மாறுபட்டுப் போர் செய்கையில் பொதுநிலையில் உள்ளவர்.
ஒருவர்மாட்டுக் கருணைகொண்டு, மற்றொருவர்மீது மறைந்து நின்று அம்பு
செலுத்துதல் நடுநிலைமைக்குரிய செயலன்று என வாலி உரைத்தனன்.
தக்கிலது என்னும் பக்கம் - அறமாகுமோ, அறமாகாதோ என்பதில்
ஐயமுண்டானாலுட், தக்கிலது என்பதில் ஐயமில்லை என்க. தகவிலது என்பது
தக்கிலது என வந்தது.  பக்கம் - பக்கம் ஆம் என ஆக்கச் சொல் வருவித்து
முடிக்க.                                                      91