4033. | என்று, தானும் எயிறு பொடிபடத் தின்று, காந்தி, விழிவழித் தீ உக, அன்று அவ் வாலி, அனையன சொல்லினான். நின்ற வீரன், இனைய நிகழ்த்தினான்: |
என்று - என்று இவ்வாறு; எயிறு பொடிபடத்தின்று - சினத்தால் பற்கள் பொடியாகும்படிக் கடித்து; காந்தி - சினந்து; விழி வழித் தீ உக - கண்களின் வழியாகத் தீப்பொறி சிதற; அன்று அவ் வாலி தானும் - அப்பொழுது அந்த வாலியானவன்; அனையன சொல்லினான் - (மேற்கூறிய) அத்தன்மையனவான சொற்களைச் சொன்னான்; நின்ற வீரன் - (அவற்றைக் கேட்டு) எதிரில் நின்றிருந்த இராமன்; இனைய நிகழ்த்தினான் - இத்தகைய வார்த்தைகளைப் (பின்வருமாறு) சொல்லலானான். எயிறு பொடிபடத் தின்று, காந்தி, விழி வழித்தீ உக என்பது வாலியின் சினத்தை உணர்த்தும் மெய்ப்பாடுகளாகும். வீரன் என்ற கவிக் கூற்றால் இராமன் வீரத்துக்கு இழுக்கு இல்லை என்பதை நுட்பமாகச்சுட்டினார். 99 |