அனுமன் ஆற்றல் பற்றி இராமனுக்குக் கூறுதல் 4070. | 'மற்று இலேன் எனினும், மாய அரக்கனை வாலின் பற்றி, கொற்றவ! நின்கண் தந்து, குரக்கு இயல் தொழிலும் காட்டப் பெற்றிலேன்; கடந்த சொல்லின், பயன் இலை; பிறிது ஒன்றேனும், ''உற்றது செய்க!'' என்றாலும், உரியன் இவ் அனுமன் என்றான். |
கொற்றவ - வெற்றியை உடையவனே!மற்று இலேன் எனினும் - உனக்கு வேறொரு பேருதவியைச் செய்யும் பேறு பெற்றிலேன் ஆயினும்; மாய அரக்கனை - வஞ்சனையில் வல்ல அரக்கனான இராவணனை; வாலின் பற்றி- என் வாலினால் சுற்றிப் பிடித்து; நின்கண் தந்து - உன்னிடம் கொணர்ந்துஒப்புவித்து; குரக்கு இயல் தொழிலும் - ஒரு குரங்காகிய எனக்கு இயன்றதொழிலையாவது; காட்டப் பெற்றிலேன் - செய்து காட்டும் பேறுபெறவில்லை; கடந்த சொல்லின் - நிகழ்ந்தது போனவற்றைச் சொல்வதால்; பயன் இலை - ஒரு பயனம் இல்லை; உற்றது செய்க என்றாலும் - நிகழும் இச்செயலைச் செய்வாயாக என்றாலும்; பிறிது ஒன்றேனும் - அன்றி வேறொரு செயலைச் செய்க என்றாலும்; இவ் அனுமன் உரியன் - (அதனைச் செய்து முடித்தற்கு) இந்த அனுமன் உரிய தகுதி உடையவன் ஆவான்; என்றான் - என்று வாலி இராமனுக்கு உறுதி கூறினான். இராவணனை வென்று அவனை வாலில் சுற்றி இராமனிடம் ஒப்படைக்க முடியாமைக்கு வாலி வருந்தினான். கழிந்த செயல்களுக்காக இரங்குதல் பயனற்றுப் போவதால் 'கடந்த சொல்லின் பயனில்லை' என்றான். குரக்கு இயல் தொழில் - விரைந்து தாவிச் சென்று பற்றி விடாப்பிடியாகக் கொணர்தல் - 'குரங்குப்பிடி' என்பது உலக வழக்கு. சுக்கிரீவன் மாட்டுப் பகைமை நீங்கி வாலி இரக்கம் கொண்டது போல, அனுமனின் திறமையை வெளிப்படுத்திப் பேசியதும் அவனது நல்ல பண்பைக் காட்டுகிறது. அனுமன் ஆற்றலை அவன் நன்கு அறிந்திருந்தனன் என்பதும்புலனாகிறது. 136 |