சுக்கிரீவனுக்கு வாலி புகன்ற அறவுரை 4072. | என்று, அவற்கு இயம்பி, பின்னர், இருந்தனன் இளவல் தன்னை வன் துணைத் தடக் கை நீட்டி வாங்கினன் தழுவி, 'மைந்த! ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்; உறுதி அஃது உணர்ந்து கோடி; குன்றினும் உயர்ந்த தோளாய்! வருந்தலை!' என்று கூறும்: |
என்று அவற்கு இயம்பி - என்று (வாலி) அந்த இராமனுக்குக் கூறி; பின்னர் - அவனுக்குப் பின்னே; இருந்தனன் இளவல் தன்னை - (வருத்தத்துடன்) இருந்தவனாகிய தன் தம்பி சுக்கிரீவனை; வன் துணைத் தடக்கை நீட்டி - வலிய இரண்டு பெரிய கைகளையும் நீட்டி; வாங்கினன் தழுவி - சேர்த்து அணைத்துக் கொண்டு; 'மைந்த - மைந்தனே!குன்றினும் உயர்ந்த தோளாய்! - மலையினும் உயர்ந்த தோள்களை உடையவனே! உனக்கு உரைப்பது - உனக்குச் சொல்வதான; உறுதி ஒன்று உண்டு - நன்மை தரும் காரியம் ஒன்று உள்ளது; அஃது உணர்ந்து கோடி - அதனை நீ உணர்ந்து ஏற்றுக் கொள்வாயாக; வருந்தலை - (எனது இறப்பினை எண்ணி) வருந்தாதே'; என்று கூறும் - என்று கூறி மேலும் கூறுவான். பின்னர் இருந்தனன். தன் செயலுக்கு வெட்கமுற்று முன் வரத் தயங்கி இருந்தனன் எனலாம். பின்னர் - அதன் பிறகு எனவும் பொருள் கொள்ளலாம். தமையன் தந்தையோடு ஒப்பவனாதால், மகனொடு ஒப்பவனான தம்பியை 'மைந்த' என அன்பின் மிகுதியால் விளித்தான். வருந்தலை - முன்னிலை எதிர்மறை வினைமுற்று. 138 |