4076.'அருமை என், விதியினாரே
     உதவுவான் அமைந்தகாலை?
இருமையும் எய்தினாய்; மற்று
      இனிச் செயற்பாலது எண்ணின்,
திரு மறு மார்பன் ஏவல்
      சென்னியின் சேர்த்தி, சிந்தை
ஒருமையின் நிறுவி, மும்மை
      உலகினும் உயர்தி அன்றே.

     விதியினாரே - ஊழ்வினையே; உதவுவான் அமைந்த காலை -
துணையாவதற்குப் பொருந்தும் பொழுது; அருமை என் - அடைதற்கு
அருமையானது யாது உளது? (எதுவுமில்லை); இருமையும் எய்தினாய் -
இம்மை, மறுமை இன்பங்களை எல்லாம் நீ அடைந்தாய்.  இனிச் செயற்பாலது
எண்ணின் -
இனி நீ செய்யத்தக்கது யாதெனக் கருதுமிடத்து; திருமறு
மார்பன் -
திருமகளையும் ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவினையும் மார்பில்
கொண்ட திருமாலாகிய இராமனின்; ஏவல் சென்னியில் சேர்த்தி -
கட்டளையைத் தலை மேற்கொண்டு; சிந்தை ஒருமையின் நிறுவி - மனத்தை
(அவனுக்குக் குற்றவேல் புரிவதாகிய) ஒருமை நிலையில் நிறுத்தி; மும்மை
உலகினும் உயர்தி -
மூன்று உலகங்களிலும் சிறப்புற்று உயர்வாயாக.

     விதியே வந்து உதவுகையில் கிடைத்தற்கரியது ஒன்றுமில்லை என்பது
உலகறிந்த உண்மை.  'விதியே நல்கின் மேவல் ஆகாது ஏன்?' (3808) எனச்
சுக்கிரீவன் உரைத்தது காண்க.  விதியினார் - உயர்வு கருதி உயர்திணைச்
சொல்லால் கூறினான். திணை வழுவமைதி.  விதியினாரே - ஏகாரம்தேற்றுப்
பொருள். ஏவல் சென்னியில் சேர்த்தல் - கட்டளையைத் தலைமேற்கொண்டு
பணிவுடன் செய்து முடித்தலைக் குறிக்கும் மற்று - வினைமாற்று.      142