4077. | 'மத இயல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி, வள்ளல் உதவியை உன்னி, ஆவி உற்றிடத்து உதவுகிற்றி; பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் சிதைவு இல செய்து, நொய்தின் தீர்வு அரும் பிறவி தீர்தி. |
மத இயல் குரக்குச் செய்கை - அறியாமையால் செருக்குறும் இயல்பாகிய குரங்கின் செயலையும்; மயர்வொடு - மயக்கத்தையும்; மாற்றி - அறவே போக்கி; வள்ளல் உதவியை உன்னி - வள்ளலாகிய இராமன் உனக்குச் செய்த உதவியை மறவாமல் உள்ளத்தில் கொண்டு; உற்றிடத்து - அவனுக்கு ஓர் இடையூறு ஏற்பட்ட காலத்தில்; ஆவி உதவுகிற்றி - உனது உயிரையும் கொடுத்து உதவிபுரிவாயாக. பதவியை எவர்க்கும் நல்கும் - உயர்பதவியாகிய வீடுபேற்றை எல்லோர்க்கும் வழங்கும்; பண்ணவன் - கடவுளாகிய இராமன்; பணித்த யாவும் - கட்டளையிட்ட செயல்களையெல்லாம்; சிதைவு இல செய்து - குறையில்லாதவனாய்ச் செய்து; தீர்வு அரும் பிறவி - எளிதில் நீக்குதற்கரிய பிறவியை; நொய்தில் தீர்தி - எளிதில் நீங்கப் பெறுவாய். 'மத' என்பது மடமையினை உணர்த்தும் உரிச்சொல். அதன் காரியமாகிய 'செருக்கு' என்னும் பொருளில் இங்கு வந்தது. குரக்குச் செய்கை - அறிவுக்குறைவாலும், சபல புத்தியாலும், திரிபுணர்ச்சியாலும் செய்யும் குரங்கின் செயல்கள். மயர்பு - இயற்கைப் பேதைமையாலும் மதுபானத்தாலும் மனம் மயங்குதல். வள்ளல் உதவி - பகைவனைக் கொன்று, மனைவியை மீட்டு, நாட்டாட்சியினையும் கொடுத்தமை. உற்றிடத்து = உற்று + இடத்து தொகுத்தல் விகாரம். உதவுகிற்றி - ஏவல் ஒருமை வினைமுற்று. கில் என்பது ஆற்றலுணர்த்தும் இடைநிலை. செய்ந்நன்றி மறவாமை பற்றி வாலி கூறுதல் நோக்கத்தக்கது. 143 |