4101. 'அணங்கு ஆர் பாகனை ஆசைதோறும் உற்று,
உணங்கா நாள்மலர் தூய், உள் அன்பினால்
இணங்கா, காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது, இத் துணை வைக வல்லையோ?

     ஆசை தோறும் உற்று - திசைகள் தோறும் சென்று; உள் அன்பினால்
இணங்கா -
உள்ளத்துப் பக்தியோடும் கூடி; உணங்கா நான் மலர் தூய் -
வாடாத புதிய மலர்களைத் தூவி; காலம் இரண்டொடு ஒன்றினும் - காலை,
மாலை நண்பகல் ஆகிய மூன்று காலங்களிலும்; அணங்கு ஆர் பாகனை -
மாதொரு பாகனாகிய சிவபெருமானை; வணங்காது - வழிபடாமல்; இத்துணை
-
இவ்வளவு நேரம்; வைக வல்லையோ - தங்கியிருக்க வல்லாயோ?

     வாலி நாள்தொறும் எல்லாத் திசைகளுக்கும் சென்று சிவபிரானை
வழிபட்டு வரும் வழக்கமுடையவன் என்பதை 3822, 3825, எண்ணிட்ட
பாடல்களிலும் காண்க.  'கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு
போற்றி, வாலியார் வழிபடப் பொருந்தினார்'; நீல மா மணிநிறத் தரக்கனை
இருபது கரத்தோடு ஒல்க.  வாலினால் கட்டிய வாலி வழிபட வணங்கும்
கோயில்.  என்னும் திருஞானசம்பந்தர் தேவாரமும் (வடகுரங்காடுதுறை : 6,8)
ஈண்டுக் காணத்தக்கது.  நாள்மலர் - அன்றலர்ந்த மலர்; வாலியின்
சிவபூசையைத் தாரை நேரில் அறிந்தவளாதலின் 'வணங்காது இத்துணை வைக
வல்லையோ' எனப்புலம்பினாள். 'முப்போதும் திருமேனி தீண்டுவார்' என்று
நம்பியாரூரரும் மூன்று காலங்களைக் குறித்துள்ளமை காண்க.  திருத்தொண்டத்
தொகை. (10.7)                                                 167