4104. | 'செரு ஆர் தோள! நின் சிந்தை உளேன் எனின், மருவார் வெஞ் சரம் எனையும் வவ்வுமால்; ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்; இருவே முள் இருவேம் இருந்திலேம். |
செரு ஆர் தோள - போர்த் தொழில் வல்ல தோள்களை உடை யவனே!நின் சிந்தை உளேன் எனில் - உன்னுடைய மனத்தில் யான் இருப்பது உண்மை என்றால்; மருவார் வெஞ்சர் - பகைவரது கொடிய அம்பு; என்னையும் வவ்வும் - என்னுயிரையும் கொன்றிருக்கும; ஒருவேன் உள் உளை ஆகின் - தனியளாகிய என் நெஞ்சில் நீ நீங்காது இருப்பவனாயின்; உய்தி - நீ இறவாது பிழைத்திருப்பாய். இருவேம் உள் - (அதனால்) ஒருவர் உள்ளத்தில் ஒருவராக; இருவேம் இருந்திலேம் - நாம் இருவரும் இருந்தோம் அல்லோம். வாலியும் தாரையும் ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் இருந்தனர் எனக் கூறத்தக்க அன்பு வாழ்க்கை நடத்தினர் எனத் தெரிகிறது. 'உன்னடைய மனத்தில் நான் இருந்திருந்தால் உன்னைத் தாக்கிய அம்பு என்னைத் தாக்கியிருக்கும். அல்லது என் மனத்தில் நீ இருபபது உண்மையானால் யான் பிழைத்திருப்பதால் நீயும் பிழைத்திருப்பாய். இவ்விரண்டினுள் எதுவும் நிகழாமையை எண்ணுகையில் ஒருவர் சிந்தையில் மற்றொருவர் இருந்தனம் எனும் மொழி உண்மையாகாது என்ன மற்றன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு (குறள் - 1122) என்ற குறள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. 170 |