4114. | மறைந்தான் மாலை அருக்கன்; வள்ளியோன் உறைந்தான், மங்கை திறத்தை உன்னுவான்; குறைந்தான், நெஞ்சு குழைந்து அழுங்குவான்; நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான். |
அருக்கன் - சூரியன்; மாலை மறைந்தான் - மாலைப் பொழுதில் மறைந்தான். வள்ளியோன் - வண்மைக் குணமுடைய இராமன்; மங்கை திறத்தை உன்னுவான் - சீதையின் நிலையைக் கருதுபவனாய்; உறைந் தான்- (அங்கு ஓர் இடத்தில்) தங்கி; குறைந்தான் - மெலிந்து; நெஞ்சு குழைந்துஅழுங்குவான் - மனம் நொந்து வருந்துவானாகி; நிறைந்து ஆர் கங்குலின்வேலை - நிறைந்து பரவிய இரவுப் பொழுதாகிய கடலை; நீந்தினான் - அரிதில் கடந்தான். மனைவியைப் பிரிந்து வருந்துவார்க்கு இராப்பொழுது நீண்டதாகத் தோன்றுவதாலும் அதனைக் கழித்தல் கடினமாக இருப்பதாலும் 'நிறைந்தார் கங்குலின் வேலை நீந்திதான்'' என்றார். 'இரவரம்பாக நீந்தினமாயின்.... கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே'' (குறுந்தொகை - 387), 'இந்நாள் நெடிய கழியும் இரா' (குறள். 1168) என்பன ஒப்பு நோக்கத்தக்கன. கங்குலின் - இன் சாரியை. உன்னுவான். குறைந்தான், அழுங்குவான் என்னும் வினை முற்றுக்கள் எச்சப் பொருளில் வந்து முற்றெச்சங்கள். 180 |