4118. | மண்ணும் நீர் முதல் மங்கலங்களும், எண்ணும் பொன் முடி ஆதி யாவையும், நண்ணும் வேலையில், நம்பி தம்பியும், திண்ணம் செய்வன செய்து, செம்மலை, |
மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் - (சுக்கிரீவனை) நீராட்டுவதற்கு வேண்டிய புண்ணிய தீர்த்தம் முதலான மங்கலப் பொருள்களும்; எண்ணும் பொன்முடி ஆதி யாவையும் - எல்லோராலும் நன்கு மதிக்கப்படும் பொன்னால் செய்த மணிமுடி முதலிய எல்லாப் பொருள்களும்; நண்ணும் வேலையில் - வந்த சேர்ந்த அளவில்; நம்பி தம்பியும் - சிறந்தவனான இராமனின் தம்பி இலக்குவனும்; செம்மலை - பெருமையுடைய சுக்கிரீவனுக்கு; திண்ணம் செய்வன செய்து - (முடிசூட்டும் முன்) தவறாது செய்யவேண்டிய செயல்களைச் செய்து.... மண்ணும் நீர் முதல் மங்கலம் - மங்கல நீராடலுக்கு வேண்டிய நீர் முதலியன. செம்மலை - உருபு மயக்கம். 4 |