ஆசிரிய விருத்தம் 4121. | 'ஈண்டுநின்று ஏகி, நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி, வேண்டுவ மரபின் எண்ணி, விதி முறை இயற்றி, வீர! பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து, போரில் மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி, நல் திருவின் வைகி. |
'வீர - வீரனே!நீ ஈண்டு நின்று ஏகி - நீ இவ்விடத்திலிருந்து சென்று; நின் இயல்பு அமை இருக்கை எய்தி - உனக்கு இயல்பாக (உரியதாகப்) பொருந்தி இருப்பிடத்தை அடைந்து; வேண்டுவ மரபின் எண்ணி - புரிய வேண்டிய செயல்களை முறைப்பட ஆராய்ந்து; விதிமுறை இயற்றி - நூல்களில் விதிப்பட்ட நெறிப்படி செய்து; பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற - (நீ) ஏற்றுக் கொண்ட பெரிய அரசாட்சிக்குத் தக்க; யாவையும் புரிந்து - எல்லாச் செயல்களையும் செய்து; போரில் மாண்டவன் மைந்தனோடும் - போர்க்களத்தில் இறந்துபட்ட வாலியின் மகன் அங்கதனோடும்; நல் திருவின் வைகி - சிறந்த செல்வ வாழ்க்கையில் நிலைபெற்று; வாழ்தி - வாழ்வாயாக. நல்லமைச்சர்களோடு நன்கு ஆய்ந்து செயல்களை முறைப்படவும் திறம்படிவும் செய்ய வேண்டியிருப்பதால் 'வேண்டுவ மரபின் எண்ணி' விதிமுறை இயற்றி' என்றான். 'மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி' என்றதால் அரசியலில் அங்கதனுக்குச் சுக்கிரீவன் இளவரசுப் பட்டம் கட்டவேண்டும் என்பதை இராமன் குறிப்பாக உணர்த்தினான் எனலாம். 7 |