4130. | 'ஆக்கமும், கேடும், தாம் செய் அறத்தொடு பாவம் ஆய போக்கி, வேறு உண்மை தேறார், பொரு அரும் புலமை நூலோர்; தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில், தக்கோய்! பாக்கியம் அன்றி, என்றும், பாவத்தைப் பற்றலாமோ? |
ஆக்கமும் கேடும் - செல்வமும் அதன் அழிவும்; தாம் செய் - அவ்வவ் உயிர்கள் செய்யும்; அறத்தோடு பாவம் ஆய - புண்ணிய, பாவங்களால் அமைவன. போக்கி - அக்காரணங்களை விடுத்து; வேறு உண்மை- பிறிதொரு காரணம் இருப்பதை; பொரு அரும் புலமை நூலோர்- ஒப்பற்ற அரிய புலமையுடைய அறிஞர்கள்; தேறார் - தெளிய மாட்டார்கள். தக்கோய் - (ஆகவே) தகுதி வாய்ந்தவனே! ஒன்றோடு ஒன்று தாக்கின - (அவ் அறமும் பாவமும்) ஒன்றோடொன்று மோதி; தருக்குறும் செருவில் - செருக்கடைவதற்கான போரில்; பாக்கியம் அன்றி - நன்மைக்குக் காரணமான நல்வினையைச் செய்வதன்றி; பாவத்தை என்றும் பற்றலாமோ - தீமையைத் தரும் தீய காரியத்தை மேற்கொள்ளலாமோ? ஆக்கத்திற்குக் காரணம் அறம். அதன் அழிவிற்குக் காரணம் பாவம். ஆகவே கடைப்பிடிப்பதற்குரிய அறம், விடுதற்குரியது பாவம் எனக் கூறப்பட்டது. 'ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தோடு பாவம் ஆய' - என்பதில் நேர்நிரல் நிறையணி அமைந்துள்ளது. அறத்திறனாலே எய்தினை அன்றோ? அது நீயும், புறத்தினாலே பின்னும் இழக்கப் புகுவாயோ' (3246); 'ஏவல் எவ்உலகும் செல்வம் எய்தினார் இசையின், ஏழாய்' பாவமோ? முன் செய்த தருமமோ? தெரியப் பாராய் (5198), 'சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு' (குறள் - 31) என்பன காண்க. வாலி சுக்கிரீவன் போரில் இராமன் வாலியுடன் சேராமல் சுக்கிரீவனோடு சேர்ந்ததைப் பாடலின் இறுதி அடியொடு ஒப்பிட்டுக்காண்க. 16 |