4130. 'ஆக்கமும், கேடும், தாம் செய்
      அறத்தொடு பாவம் ஆய
போக்கி, வேறு உண்மை தேறார்,
      பொரு அரும் புலமை நூலோர்;
தாக்கின ஒன்றோடு ஒன்று
      தருக்குறும் செருவில், தக்கோய்!
பாக்கியம் அன்றி, என்றும்,
      பாவத்தைப் பற்றலாமோ?

     ஆக்கமும் கேடும் - செல்வமும் அதன் அழிவும்; தாம் செய் -
அவ்வவ் உயிர்கள் செய்யும்; அறத்தோடு பாவம் ஆய - புண்ணிய,
பாவங்களால் அமைவன.  போக்கி - அக்காரணங்களை விடுத்து; வேறு
உண்மை-
பிறிதொரு காரணம் இருப்பதை; பொரு அரும் புலமை நூலோர்-
ஒப்பற்ற அரிய புலமையுடைய அறிஞர்கள்; தேறார் - தெளிய மாட்டார்கள்.
தக்கோய் -
(ஆகவே) தகுதி வாய்ந்தவனே! ஒன்றோடு ஒன்று தாக்கின -
(அவ் அறமும் பாவமும்) ஒன்றோடொன்று மோதி; தருக்குறும் செருவில் -
செருக்கடைவதற்கான போரில்; பாக்கியம் அன்றி - நன்மைக்குக் காரணமான
நல்வினையைச் செய்வதன்றி; பாவத்தை என்றும் பற்றலாமோ - தீமையைத்
தரும் தீய காரியத்தை மேற்கொள்ளலாமோ?

     ஆக்கத்திற்குக் காரணம் அறம். அதன் அழிவிற்குக் காரணம் பாவம்.
ஆகவே கடைப்பிடிப்பதற்குரிய அறம், விடுதற்குரியது பாவம் எனக்
கூறப்பட்டது.  'ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தோடு பாவம் ஆய' -
என்பதில் நேர்நிரல் நிறையணி அமைந்துள்ளது.  அறத்திறனாலே எய்தினை
அன்றோ? அது நீயும், புறத்தினாலே பின்னும் இழக்கப் புகுவாயோ' (3246);
'ஏவல் எவ்உலகும் செல்வம் எய்தினார் இசையின், ஏழாய்' பாவமோ? முன்
செய்த தருமமோ? தெரியப் பாராய் (5198), 'சிறப்பீனும் செல்வமும் ஈனும்
அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு' (குறள் - 31) என்பன காண்க.
வாலி சுக்கிரீவன் போரில் இராமன் வாலியுடன் சேராமல் சுக்கிரீவனோடு
சேர்ந்ததைப் பாடலின் இறுதி அடியொடு ஒப்பிட்டுக்காண்க.            16