சுக்கிரீவன் கிட்கிந்தைக்கு அழைத்தலும் இராமன் மறுத்தலும் 4132. | ''குரங்கு உறை இருக்கை'' என்னும் குற்றமே குற்றம் அல்லால், அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே, மரம் கிளர் அருவிக் குன்றம்; வள்ளல்! நீ, மனத்தின் எம்மை இரங்கிய பணி யாம் செய்ய, இருத்தியால், சில நாள், எம்பால். |
வள்ளல் - வண்மைக் குணம் உடையவனே! மரம்கிளர் அருவிக் குன்றம் - மரங்கள் விளங்குகின்ற அருவிகளை உடைய கிட்கிந்தை மலை; குரங்கு உறை இருக்கை - குரங்குகள் வாழ்கின்ற இடம்; என்னும் குற்றமே குற்றம் அல்லால் - என்று கூறப்படும் ஒரு குற்றத்தை உடையதே அல்லாமல்; அரங்கு எழு துறக்க நாட்டுக்கு - (பிற சிறப்புக்களால்) சபைகள் பொருந்திய தேவர் உலகத்துக்கே; அரசு எனல் ஆகும் அன்றே - தலைமை கொண்டு மேம்பட்டதென்று கூறத்தக்க தல்லவா? நீ - (அதனால்) நீ; மனத்தின் எம்மை இரங்கிய பணி - உன் மனத்தில் எங்கள் பால் இரக்கங் கொண்டு கட்டளையிடும் வேலைகளை; யாம் செய்ய - நாங்கள் செய்ய; சில நாள் எம்பால் இருத்தி - சில நாட்கள் எம்முடன் இருப்பாயாக. அரங்கு - சுதர்மை முதலிய தெய்வ சபைகள். நில, நீர்வளம் பெற்று வாழ்வதற்கு உரிய வசதிகள் கொண்ட இடமாதலின் 'மரம்கிளர் அருவிக் குன்றம்' எனப்பட்டது. வள்ளல் - அண்மை விளி; இழந்த மனைவியையும் அரசினையும் தனக்கு அளித்தது கருதிக் கூறியது. கிட்கிந்தையைக் குரங்குகள் வாழும் இடம் என ஒரு குறை கூறலாமேயன்றி அது சுவர்க்கத்தினும் மேம்பட்டது என்பதால் இராமனை அவ்விடம் தங்குமாறு சுக்கிரீவன் வேண்டினான் என்க. 18 |