4133. | 'அரிந்தம! நின்னை அண்மி, அருளுக்கும் உரியேம் ஆகி, பிரிந்து, வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால்; கருந் தடங் கண்ணினாளை நாடல் ஆம் காலம்காறும் இருந்து, அருள் தருதி, எம்மோடு' என்று, அடி இணையின் வீழ்ந்தான். |
அரிந்தம - பகைவர்களை அழிப்பவனே! நின்னை அண்மி - (நாங்கள்) உன்னைப் புகலடைந்து; அருளுக்கும் உரியேம் ஆகி - (உனது) கருணைக்கும் உரியவர்களாயிருந்து; பிரிந்து - (பின்) உன்னை விட்டுப் பிரிந்து; வேறு எய்தும் செல்வம் - தனியே அனுபவிக்கின்ற செல்வம்; வெறுமையின் பிறிது அன்று ஆம் - வறுமையினும் வேறான தன்று; கருந்தடங் கண்ணினாளை - (ஆதலால்) கரிய பெரிய கண்களை உடைய பிராட்டியை; நாடல் ஆம் காலம் காறும் - தேடுதற்கு ஏற்ற காலம் வருமளவும்; எம்மோடு இருந்து அருள் தருதி - (கிட்கிந்தையில்) எங்களோடு இருந்து அருள்புரிவாய்; என்று - என்று கூறி; அடி இணையின் வீழ்ந்தான்- இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். வாலியைக் கொன்ற திறம் பற்றி 'அரிந்தம' என அழைத்தான். இராமனைச் சேர்ந்து பெறும் இன்பத்தை நோக்க, தனியே வேறாகப் பெறும் செல்வம் பெற்றும் பெறாதது போலாகும் என்றான். 19 |