4134. ஏந்தலும், இதனைக் கேளா, இன்
      இள முறுவல் நாற,
'வேந்து அமை இருக்கை, எம்போல்
      விரதியர் விழைதற்கு ஒவ்வா;
போந்து அவண் இருப்பின், எம்மைப்
      போற்றவே பொழுது போமால்;
தேர்ந்து, இனிது இயற்றும் உன்தன்
      அரசியல் தருமம் தீர்தி.

     ஏந்தலும் - பெருமையில்  சிறந்த இராமனும்; இதனைக் கேளா -
(சுக்கிரீவன் கூறிய) இவ்வுரையைக் கேட்டு; இன்இள முறுவல் நாற - இனிய
புன்னகை தோன்ற; வேந்து அமை இருக்கை - அரசர்க்குரிய
அரண்மனையில் தங்கியிருக்கும்; எம்போல் விரதியர் - எம்மைப் போல்
விரதம் பூண்டோர்; விழைதற்கு ஒவ்வா - விரும்பியிருத்தற்குத் தகாததாகும்;
அவண் போந்து இருப்பின் -
(மேலும்) அவ்விடத்தில் (கிட்கிந்தா
நகரத்தினுள்) வந்து வசித்தால்; எம்மைப் போற்றவே பொழுது போம் -
எம்மை உபசரிப்பதிலேயே (உனக்குப்) பொழுது கழிந்திடும்; தேர்ந்து இனிது
இயற்றும் -
ஆராய்ந்து இனிது நடத்தும்; உன்தன் அர சியல் தருமம் -
உன் அரசாட்சியின் முறைமையினின்றும்; தீர்தி - தவறியவனாவாய்.

     விரதியர்  - தவ வாழ்வினர்.  'தாழிரும் சடைகள் தாங்கித் தாங்க அரும்
தவம் மேற்கொண்டு' கானகத்தில் வாழவேண்டும் என்பது கைகேயி சொன்ன
(1601); அது பழுதாகாமல் தவ வாழ்வினராக இருந்தனர் இராமனும் இளவலும்.

     முறுவல் - அன்பு பற்றி எழுந்தது. கேளா - செய்யா என்னும்
வாய்பாட்டு வினையெச்சம் உடன்பாட்டுப் பொருளில் வந்தது. நாற - தோன்ற;
                                                           20