4135. 'ஏழ் - இரண்டு ஆண்டு,  யான் போந்து
      எரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும் வள
      நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடந் தோள்
      வீர! பார்த்திலைபோலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி,
      யான் உறும் இன்பம் என்னோ?

     வாழியாய் - வாழ்வை உடையவனே!ஏழ் இரண்டு ஆண்டு -
பதினான்கு வருட காலம்; யான் போந்து எரி வனத்து இருக்க - நான்
சென்று வெம்மை மிக்க காட்டில் வசிப்பதாக; ஏன்றேன் - ஏற்றுக்
கொண்டேன்; அரசர் வைகும் வளநகர் - அரசர்கள் வாழும் செல்வ வளம்
வாய்ந்த நகரில்; வைகல் ஒல்லேன் - தங்குவதற்கு உடன்படேன்.  பாழி
அம் தடந்தோள் வீர -
(மேலும்) வலிமை வாய்ந்த அழகிய பெரிய
புயங்களை உடைய வீரனே!யாழ் இசை மொழியோடு அன்றி - யாழின்
இசைபோலும் சொல்லையுடைய சீதையோடு அல்லாமல்; யான் உறும் இன்பம்
என்னோ -
நான் அடையும் இன்பம் யாதோ? பார்த்திலை போலும் -
(நீ இதனை) எண்ணிப் பார்த்தாய் இல்லை போலும்!

     வாலி இறந்தபிறகு, கிட்கிந்தைக்கு வந்து சுக்கிரீவனுக்கு முடிசூட்ட
வேண்டும் என வேண்டியவன் அனுமன் என்கிறது வான்மீகம்; சுக்கிரீவன்
அழைப்பதாக அங்குச் செய்தி இல்லை.  தந்தை கட்டளையின்படி பதினான்கு
ஆண்டுகள் காட்டில் உறைதல் வேண்டும், நகரினுள்ளாவது ஊரினுள்ளாவது
புகுதல் தகாது எனக் கூறி சுக்கிரீவன் வேண்டுகோளை மறுக்கிறான், இராமன்.

     எரிவனம் - வெயிலின் கடுமையால் தீப்போல் சுடுகின்ற காடு.  சீதையின்
சொல்லுக்கு யாழ் உவமை. 'குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும்,
இனிய சொல் கிளியே' (2073); 'குழலும் யாழும், கொழும்பாகும் அயிலும்
அமுதும் சுவை தீர்த்த மொழி' (3569) என்பன காண்க.  இராமனுக்குச்
சீதையோடன்றித் தனியே எய்தும் இன்பம் இன்பமாகாது.  அன்று ஏ - அசை
நிலைகள்.                                                      21