4139. 'மறித்து ஒரு மாற்றம் கூறான்,
      'வான் உயர் தோற்றத்து அன்னான்
குறிப்பு அறிந்து ஒழுகல். மாதோ,
      கோது இலர் ஆதல்' என்னா;
நெறிப் பட, கண்கள் பொங்கி
      நீர் வர, நெடிது தாழ்ந்து,
பொறிப்ப அருந் துன்பம் முன்னா,
      கவி குலத்து அரசன் போனான்.

     கவிகுலத்து அரசன் - (அம்மொழிகளைக் கேட்டு) குரங்குகளின்
கூட்டத்திற்கு அரசனான சுக்கிரீவன்; மறித்து ஒரு மாற்றம் கூறான் -
இராமன் சொல்லுக்கு மாற்றாக ஒரு வார்த்தையும் பேச இயலாதவனாய்; 'வான்
உயர் தோற்றத்து அன்னான் -
வான் போல் உயர்ந்த தவவேடத்தையுடைய
இராமனின்; குறிப்பு அறிந்து ஒழுகல் - குறிப்பை உணர்ந்து அதன்படி
நடத்தலே; கோது இலர் ஆதல் என்னா - குற்ற மில்லாதவர் ஆகுதலால்'
என்று எண்ணி; கண்கள் நீர் பொங்கி - கண்களில் நீர் பெருகி; நெறிப்பட
வர -
முறையாக ஒழுக; நெடிது தாழ்ந்து - நெடிது விழுந்து வணங்கி;
பொறிப்ப அருந்துன்பம் முன்னா -
கணக்கிட முடியாத பெரிய துன்பத்தை
மனத்தில் கொண்டு; போனான் - (கிட்கிந்தா நகரத்தை நோக்கிச்) சென்றான்.

     சுக்கிரீவன் மறுமாற்றம் கூறாது கிட்கிந்தா நகர் சென்றான் என்பதில்
குறிப்பறிந்து நடக்கும் பண்பு அவனிடம் இருப்பதைக் காணலாம்.  'வானுயர்
தோற்றம்' (குறள் 212) என்பதற்கு 'வான்போல் உயர்ந்த தவவேடம்' என்பர்
பரிமேலழகர் வானினம் உயர்ந்த மானக் கொற்றவ' (4067) என்று முன்னரும்
குறித்தது காண்க.  பொறிப்ப அருந்துன்பம் - சீதை பிரிவால் இராமன் படும்
துயர் கண்டு சுக்கிரீவன் வருந்திய வருத்தமும் இராமனைப் பிரிவதால் ஏற்படும்
வருத்தமும் பெரிய என்பதாம்.  நெடிது வீழ்தல் - எட்டு உறுப்புக்களும்
பூமியில் படும்படி வீழ்ந்து வணங்கல்.  மாது, ஓ -அசைகள்.             25