அங்கதனுக்கு இராமன் அறிவுரை

4140. வாலி காதலனும், ஆண்டு,
      மலர் அடி வணங்கினானை,
நீல மா மேகம் அன்ன
      நெடியவன், அருளின் நோக்கி,
'சீலம் நீ உடையை ஆதல்,
      இவன் சிறு தாதை என்னா,
மூலமே தந்த நுந்தை ஆம்
      என, முறையின் நிற்றி.'

     ஆண்டு மலரடி வணங்கினானை - அப்பொழுது தன் மலர் போன்ற
திருவடிகளில் வணங்கியவனான; வாலி காதலனும் - வாலியின் மகனான
அங்கதனையும்; நீலமாமேகம் அன்ன நெடியவன் - நீல நிறம் வாய்ந்த
சிறந்த மேகத்தையொத்த பெரியவனான இராமன்; அருளின் நோக்கி -
கருணையோடு பார்த்து; நீ சீலம் உடையை ஆதல் - 'நீ ஒழுக்கம்
உடையவன் ஆகுக; இவன் சிறு தாதை என்னா - இந்தச் சுக்கிரீவனை உன்
சிறிய தந்தை என்று கருதாமல்; மூலமே தநத் நுந்தை ஆம் என - உன்
பிறப்பிற்குக் காரணமாகிய உன் தந்தையாகவே கொண்டு; முறையின் நிற்றி -
அவன் கட்டளைப்படி நிற்பாயாக!

     இப்பாடல் அடுத்த பாடலில் உள்ள 'என்றான்' என்பதனோடு இயையும்.
வணங்கினான் (ஆகிய) வாலி காதலனையும் என உருபு பிரித்துக் கூட்டுக. நீல
மேகம் இராமனுக்கு உவமை. நெடியவன் = பெருமைக்குரியவன்; மாவலின்
பொருட்டு நீண்டனுமாம்.  ஆதல் என்பதற்கு ஆதலால் என்றும் பொருள்
கொள்ளலாம்.                                                  26