4141. | என்ன, மற்று இனைய கூறி, 'ஏகு அவன் - தொடர' என்றான்; பொன் அடி வணங்கி, மற்று அப் புகழுடைக் குரிசில் போனான்; பின்னர், மாருதியை நோக்கி, 'பேர் எழில் வீர! நீயும், அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி, அறிவின்' என்றான். |
என்ன மற்று - என்று மேலும்; இனைய கூறி - இத்தகைய வார்த்தைகளைக் கூறி; அவன் - தொடர ஏகு என்றான் - 'அந்தச் சுக்கிரீவனைத் தொடர்ந்து செல்வாயாக' என்று கூறினான்; மற்று - அதன் பின்; அப்புகழுடைக் குரிசில் - புகழ் பொருந்திய சிறந்த அங்கதன்; பொன் அடி வணங்கி - (இராமனுடைய) பொன் போன்ற பாதங்களில் வணங்கி; போனான் - கிட்கிந்தை நகருக்குச் சென்றான்; பின்னர் மாருதியை நோக்கி - அதற்குப் பிறகு (இராமன்) அனுமனைப் பார்த்து; 'பேர் எழில் வீர - மிக்க அழகையுடைய வீரனே; நீயும் - நீயும் (சென்று); அன்னவன் அரசுக்கு ஏற்றது - அச்சுக்கிரீவனது அரசாட்சிக்கு ஏற்ற காரியங்களை; அறிவின் ஆற்றுதி - உன் அறிவினால் செய்வாயாக; என்றான்- என்று சொன்னான். அ - பண்டறி சுட்டு; அனுமன் அழகு மிக்கவன் என்பதால் 'பேர் எழில் வீர' என விளித்தான். அனுமனுக்குச் சுந்தரன் என்னும் ஒரு பெயர் உண்டு. உருவ அழகு, வீரம், அறிவு ஆகிய மூன்றிலும் அனுமன் சிறந்தவன் என்பதை இராமன் கூற்றால் அறிய முடியகிறது. 27 |