அனுமனைக் கிட்கிந்தைக்குச் செல்லுமாறு இராமன் வற்புறுத்தல் 4143. | 'நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால், அரும்புவ, நலனும் தீங்கும்; ஆகலின், ஐய! நின்போல் பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா. |
நிரம்பினான் ஒருவன் - அரசர்க்குரிய பண்புகள் நிறைந்த ஒப்பற்ற மன்னன் ஒருவன்; காத்த - பாதுகாத்த; இறுதி நின்ற வரம்பு இலாதது - கடை எல்லை இல்லாததும்; நிறை அரசு அதனை - எல்லாச் செல்வ வளங்களும் நிறைந்ததுமான அரசாட்சியை; மற்று ஓர் தலைமகன் - வேறு ஓர் அரசன்; வலிதின் கொண்டால் - வலியக் கைப்பற்றிக் கொண்டால்; நலனும் தீங்கும் அரும்புவ - (அந்த அரசியலில்) நன்மைகளேயன்றித் தீமைகளும் தோன்றுவனவாம்; ஆகலின் - ஆதலால்; ஐய - ஐயனே; நின்போல் பெரும்பொறை அறிவினோரால் - (அத்தகைய ஆட்சி) உன்னைப் போன்ற பொறுமையும் அறிவும் நிறைந்தவர்களாலேயே; நிலையினைப் பெறுவது - நிலை பெறக் கடவதாகும். நிரம்பினான்: அரசர்க்கு இன்றியமையாதனவாகக் கூறப்படும் அஞ்சாமை, ஈகை, அறிவு; ஊக்கம், கல்வி, வீரம் முதலிய நற்பண்புகள் நிரம்பப்பெற்றவன். நிறை அரசு - பல்வேறு வளங்களுடன், பல சிறப்புகளுடன் கூடிய அரசு. வள்ளுவர் குறிப்பிடும் 'இறைமாட்சி, நாடு' அதிகாரக் கருத்துக்களை இங்கே கொள்ளலாம். 'நிரம்பினான்' - ஈண்டு வாலியைக் குறித்தது; 'மற்றோர் தலைமகன்' சுக்கிரீவனைக் குறித்தது. இறுதி நின்ற வரம்பு - அழிவு, முன் பாடலில் அனுமனின் பொய்யில் உள்ளத்தையும், அன்பையும் கூறியவன் இப்பாடலில் அவனது பொறுமையினையும், அறிவையும் உரைத்து அரசியலுக்கு அவனது இன்றியாமையினை உணர்த்தினான், ''வெஞ்சின் அரக்கர் ஐவர் புலன்கள் ஒத்தார்; அவனும் நல் அறிவை ஒத்தான்'' (5664) எனப்பின்னரும் அனுமன் புகழப்படுவதைக் காணலாம. 29 |