4163. கல்லிடைப் படும் துளித்
     திவலை, கார் இடு
வில்லிடைச் சரம் என,
      விசையின் வீழ்ந்தன;
செல்லிடைப்பிறந்த செங்
      கனல்கள் சிந்தின,
அல்லிடை, மணி சிறந்து,
      அழல் இயற்றல்போல்.

     கல்லிடைப் படும் - (அந்த மலையிலுள்ள) கற்களின் இடையே
(மேகங்கள்) சொரிகின்ற; துளித்திவலை - மழை நீர்த்துளிகள்; கார் இடு
வில்லிடை -
மேகங்களில் தோன்றிய இந்திர வில்லிலிருந்து பாய்கின்ற; சரம்
என -
அம்புகள் போல; விசையின் வீழ்ந்தன - வேகத்தோடு விழுந்தன;
செல்லிடைப் பிறந்த -
(அம்) மேகங்களிலிருந்து தோன்றிய; செங்கனல்கள்-
செந்நிறம் கொண்ட இடியாகிய நெருப்புத் திரள்கள்; மணி அல்லிடைச்
சிறந்து -
மாணிக்கங்கள் இரவுக் காலத்தில் மிகுதியாக ஒளிவீசி; அழல்
இயற்றல் போல் சிந்தின -
நெருப்பொளி வீசுதல் போலச் சிந்தின.

     வில் - இந்திரவில். செல்வது என்ற இயல்பு பற்றி மேகம் 'செல்'
எனப்பட்டது போலும். மழைத் தாரைகள் அம்புபோல வீழ, இரவில் மாணிக்க
மணிகள் போல ஒளி வீசி இடிகள் சிந்தின என்பதால் நீர், நெருப்பு என
இரண்டினையும் மேகம் பெற்றிருந்தமை புலனாகிறது.                  16