4167. வண்ண வில் கரதலத்து
      அரக்கன், வாளினன்,
விண்ணிடைக் கடிது கொண்டு
      ஏகும் வேலையில்,
பெண்ணினுக்கு அருங் கலம்
      அனைய பெய்வளை
கண் என, பொழிந்தது -
      கால மாரியே.

     வண்ண வில் கரதலத்து அரக்கன் - அழகிய வில்லை ஏந்திய
கையையுடைய இராவணன்; வாளினன் - வாளாயுதத்தையும் உடைய வன்;
கொண்டு -
 (சீதையை) எடுத்துக்கொண்டு; விண்ணிடை கடிது ஏகும்
வேலையில்
- ஆகாயத்தில் விரைவாகச் செல்கின்ற சமயத்தில்;
பெண்ணினுக்கு அருங்கலம் அனைய -
மகளிர்க்கு அரிய அணிகலம்
போன்ற; பெய் வளை - வளையல் அணிந்த சீதையின்; கண் என - கண்கள்
நீர் சொரிந்தாற்போல; காலமாரி பொழிந்தது - கார்காலத்தில் மழை
பொழிந்தது.

     இராவணன் விண் வழியாகச் சீதையைக் கவர்ந்து சென்றபோது சீதை
விடுத்த கண்ணீர்போல மழை பெய்தது எனக் கதை நிகழ்ச்சியே இங்கு
உவமையாக்கப்பட்டது.  வில்லைக் கொண்டு போர்செய்து பற்றாது,
வஞ்சனையால் சீதையைக் கவர்ந்து சென்றதால், வில் கைக்கு வெற்று
அலங்காரமாயிற்று என்பதால் இகழ்ச்சி தோன்ற 'வண்ண வில் கரதலத்து'
என்றார்.  இராமன் தொடர்ந்து வந்து விடுவானோ என்ற அச்சத்தால் விரைந்து
சென்றான் என்பது தோன்ற 'விண்ணிடைக் கடிது கொண்டு' என்றார்.  சீதை
பெண்மைக்கு அணிகலனாவாள் என்பதால், 'பெண்ணினுக்கு அருங்கலம்
அனைய பெய்வளை' என்றார்.  பெய்வளை - அன்மொழித்தொகை; இராமன்
சீதையை 'பெண் அருங்கலலம' (2077) என விளித்தது காண்க.  கண் எனக்
காலமாரி பொழிந்தது என்பதில் சீதை வடித்த கண்ணீர் மிகுதி புலப்படும்.
இராவணன் கவர்ந்து செல்கையில் சீதை கண்ணீர் விட்டதை 'மழை  பொரு
கண் இணை வாரியோடு தன் இழை பொதிந்து இட்டனள்' (3903) என்றதால்
அறிக.                                                       20